/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறு பாசன கணக்கெடுப்பில் களமிறங்கும் பணியாளர்கள்
/
சிறு பாசன கணக்கெடுப்பில் களமிறங்கும் பணியாளர்கள்
ADDED : மே 09, 2025 06:41 AM

திருப்பூர்: தமிழகம் முழுவதும் சிறுபாசன கணக்கெடுப்பு, இம்மாத இறுதியில் துவங்க உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், கணக்கெடுப்பில் ஈடுபட உள்ள வி.ஏ.ஓ.,க்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தலைமை வகித்து, மாவட்ட புள்ளி யியல் துறை உதவி இயக்குனர் சுசீலா பேசியதாவது:
ஏழாவது சிறுபாசன கணக்கெடுப்பு விரைவில் துவங்க உள்ளது. 2 ஆயிரம் எக்டர் பரப்பளவுக்கு உட்பட்ட பாசனம் பெறும் விவசாய நிலங்களில் அமைத்துள்ள நீராதாரங்கள் குறித்த விரிவான விவரங்களை சேகரித்து, மொபைல் ஆப் மூலம் பதிவு செய்ய வேண்டும். விவசாயிகள் தனியாகவோ, கூட்டாக இணைந்து அமைந்துள்ள கிணறு, ஆழ்துளை கிணறுகளின் விவரம், பாசனம் பெறும் பரப்பு, பாசன வசதிக்கான செலவினங்கள்; நிதி ஆதாரம் எந்தவகையில் பெறப்பட்டது, அரசு மானிய திட்டங்களை பயன்படுத்தியுள்ளனரா, எந்த வகையில் நீர் எடுக்கப்படுகிறது, பயன்படுத்தப்படும் மோட்டாரின் திறனை பதிவு செய்யவேண்டும்.
ஏற்கனவே பயன்பாட்டிலிருந்து கிணறு, ஆழ்துளை கிணறுகள் தற்போது பயன்பாட்டில் இல்லையெனில், அதுகுறித்த விரிவான காரணங்களை விவசாயிகளிடம் கேட்டறிய வேண்டும். பெரிய மற்றும் நடுத்தர ஆயக்கட்டு பாசன கால்வாய்கள் செல்லும் பகுதியை ஒட்டி, கிணறு, ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டிருப்பின், என்ன காரணத்தால், ஆழ்துளை கிணறு உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது என கேட்கவேண்டும். பாசன நீர், விவசாய நிலத்துக்கு வந்து சேர்வதில்லையா; போதுமானதாக இல்லையா என்கிற விவரங்களை பதியவேண்டும். விவசாய பயன்பாட்டு கிணறு, ஆழ்துளை கிணறுகளிலிருந்து குடிநீருக்காக தண்ணீர் எடுக்கப்படுமானால், அவ்விவரங்களையும் கேட்டு தவறாமல் பதியவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புள்ளியியல் ஆய்வாளர் சுரேஷ் குமார் பேசிய தாவது:
நிலத்தடி நீர், மேற்பரப்பு நீர் திட்டங்கள், பொங்குநீர் (ஆர்ட்டீசியன் ஊற்று) ஆகிய மூன்று பிரிவுகளில் சிறுபாசன கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. மேற்பரப்பு நீர் திட்டத்தில், மேற்பரப்பு பாசன திட்டம், நீரேற்று பாசன திட்டம் ஆகிய இரண்டுவகைகள் உள்ளன. மேற்பரப்பு பாசன திட்டத்தில், ஆறு, குளம், குட்டை, அணைகள், ஓடைகள் வடிகால்கள் இடம்பெறுகின்றன. குறிப்பிட்ட நீர் நிலை, நிரந்தரமானதாக உள்ளதா; பாசன பரப்பு எவ்வளவு; பாசன பரப்பு விவரிவடைந்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா; அதற்கான காரணங்களை குறிப்பிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருப்பூர் மாவட்ட புள்ளியியல் அதிகாரி மணிமாறன், ஆய்வாளர்கள் சங்கீதா, குணசேகரி மற்றும் வி.ஏ.ஓ., க்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.