/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிலாளர்கள் ஊருக்கு பயணம் கொப்பரை உற்பத்தி பாதிப்பு
/
தொழிலாளர்கள் ஊருக்கு பயணம் கொப்பரை உற்பத்தி பாதிப்பு
தொழிலாளர்கள் ஊருக்கு பயணம் கொப்பரை உற்பத்தி பாதிப்பு
தொழிலாளர்கள் ஊருக்கு பயணம் கொப்பரை உற்பத்தி பாதிப்பு
ADDED : ஜன 14, 2024 11:43 PM
உடுமலை;கொப்பரை உலர் களங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றதால், கொப்பரை உற்பத்தி முடங்கியது.
மழை குறைவாக பெய்யும் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கொப்பரை உற்பத்தி அதிக அளவில் நடக்கிறது.
குடிசைத்தொழிலாக நடக்கும் கொப்பரை உலர் களங்களில், வெளியூர் தொழிலாளர்களே வேலை பார்க்கின்றனர். பாமாயில் இறக்குமதி மற்றும் கலப்படம் போன்றவற்றால், கொப்பரை மார்க்கெட் சரிந்துள்ளது.
இதனால், பாதிக்கும் மேற்பட்ட உலர்களங்களில், ஏற்கனவே கொப்பரை உற்பத்தி தடைப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்பொழுது பொங்கல் பண்டிகை துவங்கியுள்ளது.
உலர் களங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களில் பொங்கல் திருவிழாவை கொண்டாட குடும்பத்துடன் புறப்பட்டனர்.
இதனால், உடுமலை, காங்கயம் உள்ளிட்ட பல பகுதிகளில், கொப்பரை உற்பத்தி மொத்தமாக முடங்கிக்காணப்படுகிறது.
இது குறித்து உலர்கள உரிமையாளர்கள் கூறியதாவது:
தொழில் நசிவு காரணமாக பலர், ஏற்கனவே உற்பத்தியை நிறுத்தி விட்டனர். பொங்கல் பண்டிகைக்கு செல்லும் தொழிலாளர்கள், வேலை குறைவாக இருப்பதை காரணம் காட்டி, தங்கள் ஊர்களிலேயே செட்டிலாகவும் வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு லட்சக்கணக்கில் முன்பணம் கொடுத்து வேலையில் அமர்த்தியுள்ளோம். தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பாவிட்டால், கொடுத்த முன்பணத்தை திரும்ப பெறுவதில் பெரும் சிரமம் உள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.