ADDED : மார் 25, 2026 10:24 PM
திருச்சி: தமிழ்நாடு பிராமணர் சங்கம் (பதிவு) தலைவர் சி.ஜி.வி. கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர் பம்மல் ராமகிருஷ்ணன், மாநில பொருளாளர் ஜெயராமன் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:
தமிழக சட்டசபை தேர்தலில், பிராமணர் சமுதாயத்தில் இருந்து கட்சிகள் சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் பிராமணர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்காதது துரதிர்ஷ்டவசமானது.
குறிப்பாக, அ.தி.மு.க., நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது. எப்படியிருந்தாலும் பிராமணர்கள் எங்களுக்குத்தான் ஓட்டளிப்பார்கள் என்று அவர்கள் நினைத்தால் அது தவறாகத் தான் இருக்கும். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சில கட்சிகளின் ஓட்டு சதவீதத்தை விட பிராமணர்கள் ஓட்டு சதவீதம் அதிகம் என்பதை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்ட எங்கள் சமுதாயத்தை சேர்ந்த இயக்கத்தில் தீவிரமாக உள்ளவர்களுக்கு கூட தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர், ஆலந்துார், கும்பகோணம், ஸ்ரீரங்கம் போன்ற தொகுதிகளில் பிராமணர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்றால் எங்களை ஆதரிப்பவர்களுக்கும், அங்கீகாரம் தருபவர்களுக்கும் தான் ஓட்டளிப்போம் என்ற நிலைப்பாட்டை அவசர நிர்வாகக்குழுவை கூட்டி முடிவெடுப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
