/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
சூரியூரில் களத்தில் இறந்தது காளை
/
சூரியூரில் களத்தில் இறந்தது காளை
ADDED : ஜன 15, 2025 11:46 PM

திருச்சி : திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி, சூரியூரில் நேற்று நடந்தது. அதில், 60 பேர் காயமடைந்தனர்.
உச்சநீதிமன்ற வழிபாட்டுதலின்படி, காலை 8:00 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. டி.ஆர்.ஓ., அருள், கொடி அசைத்து, ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்தார்.
திருச்சி, கரூர், பெரம்பலுார், அரியலுார், தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த, 800 காளைகள் பங்கேற்றன. எட்டு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில், 500 வீரர்கள் களம் இறங்கி, காளைகளை அடக்கினர். காளை முட்டியதில், 60 பேர் காயமடைந்தனர்.
சூரியூர் ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்பட்ட காளை, மற்றொரு காளையுடன் மோதியதில் இறந்தது. சூரியூர் ஜல்லிக்கட்டில், நான்கு சுற்றுகள் முடிவடைந்த நிலையில், 340க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இந்நிலையில், திருச்சி, திருவளர்ச்சோலையைச் சேர்ந்த சண்முகம் என்பவரது காளை அவிழ்த்து விடப்பட்டு, வாடிவாசலை விட்டு வெளியேறியது.
ஏற்கனவே, களத்திற்குள் அவிழ்த்து விடப்பட்டிருந்த வேறு ஒரு காளை, சண்முகத்தின் காளை மீது வேகமாக வந்து மோதியதில், களத்திலேயே சரிந்தது.
கால்நடைத் துறையினரின் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி, சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட காளை வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனால், காளை வளர்த்தவர்கள் கதறி அழுதனர்.
சூரியூர் ஜல்லிக்கட்டில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளை வெற்றி பெற்றது.
இதையடுத்து, காளை உரிமையாளரான விஜயபாஸ்கருக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பரிசு வழங்கினார்.
சூரியூரில் 17 காளைகளை அடக்கிய திருச்சி மாவட்டம், நவல்பட்டு பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார், முதல் பரிசாக பைக் வென்றார்.

