/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
அரசு விழாவுக்கு மண் எடுக்கும் ஒப்பந்தம்; இரு அமைச்சர்களின் ஆதரவாளர்கள் குஸ்தி
/
அரசு விழாவுக்கு மண் எடுக்கும் ஒப்பந்தம்; இரு அமைச்சர்களின் ஆதரவாளர்கள் குஸ்தி
அரசு விழாவுக்கு மண் எடுக்கும் ஒப்பந்தம்; இரு அமைச்சர்களின் ஆதரவாளர்கள் குஸ்தி
அரசு விழாவுக்கு மண் எடுக்கும் ஒப்பந்தம்; இரு அமைச்சர்களின் ஆதரவாளர்கள் குஸ்தி
UPDATED : டிச 12, 2024 03:55 AM
ADDED : டிச 12, 2024 01:51 AM

திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சிப்காட் வளாகத்தில் வரும் ஜன., 28 முதல் பிப்., 3 வரை பாரத சாரணர் வைரவிழா மற்றும் கருணாநிதி நுாற்றாண்டு விழா நடக்கிறது. இதில் ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக, சிப்காட்டில் பிரதான சாலைகள் அமைத்தல், ஹெலிபேட் மற்றும் அதற்கான அணுகுசாலைகள் அமைக்க, 6,000 கன மீட்டர் மண் தேவைப்படுகிறது.
அந்த மண் எடுத்துக் கொடுக்கும் ஒப்பந்தம் மற்றும் அனுமதியை, அமைச்சர் நேருவின் ஆதரவாளரும், தி.மு.க., மணப்பாறை கிழக்கு ஒன்றிய செயலருமான ஆரோக்கியம் பெற்றார்.
நேற்று முதல், 19ம் தேதி வரை, 2,120 யூனிட் மண் எடுக்க, மணப்பாறை தாசில்தார் அனுமதி கடிதம் வழங்கிய நிலையில், விடத்திலாம்பட்டியில் உள்ள அரசு புறம்போக்கு கல்லாங்குத்து நிலத்தில் உள்ள கிராவல் மண் எடுக்க லாரிகள் வந்தன.
அப்போது அங்கு வந்த அமைச்சர் மகேஷின் ஆதரவாளர்களான மணப்பாறை தி.மு.க., நகர செயலர் செல்வம், திருச்சி தெற்கு மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலரும், 'மண் எடுக்க எப்படி ஒருவருக்கே ஒப்பந்தம் கொடுக்கலாம்?' எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அதிகாரிகளை திட்டினர்.
விடத்திலாம்பட்டி மக்களும் மண் எடுக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், இங்கு மண் எடுக்கப்படாது என்று உறுதி அளித்து, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
அரசு விழாவுக்கு மண் எடுக்க, பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் ஆதரவாளர்கள், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேருவின் ஆதரவாளரின் லாரிகளை மறித்து ரகளையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.