/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திருச்சியில் "ஷாக்' அடித்து மயில் சாவு
/
திருச்சியில் "ஷாக்' அடித்து மயில் சாவு
ADDED : செப் 03, 2011 12:29 AM
திருச்சி: 'திருச்சியில் மின்சாரம் தாக்கி நமது தேசிய பறவையான மயில்கள் இறப்பது தொடர்ந்து நடக்கிறது.
இதைத்தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரிக்கை எழுந்துள்ளது. திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள ராஜா காலனி பின்புறத்தில் ஏராளமான வயல்வெளியில் விளையும் நெற்கதிர்களை குறிவைத்து அந்த பகுதிக்கு ஏராளமான மயில்கள் வருவது வழக்கம். அவ்வாறு வரும் மயில்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும்போது, பொதுமக்கள் பலரும் அவற்றுக்கு சாப்பாடு போடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் மயில்கள், இடையில் உள்ள டிரான்ஃபார்மர்களில் உட்காரும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி இறந்து விடுகின்றன.
சநேற்று காலையும் அப்படித்தான் உணவைத் தேடி குடியிருப்புக்கு வந்த ஆண் மயில் ஒன்று, அங்குள்ள டிரான்ஃபார்மரில் ஓய்வாக உட்காரும் போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி இறந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்து, இறந்தபோன மயிலை எடுத்து புதைத்தனர். அப்போது பொதுமக்கள் வனத்துறையினரிடம், இப்பகுதியில் அடிக்கடி மயில்கள் மின்சாரம் தாக்கி இறக்கின்றன. அதைத்தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
வனத்துறையினரிடம் கேட்டபோது, ''இப்பகுதிக்கு மயில்கள் அடிக்கடி வரக்காரணம், பொதுமக்கள் மயில்களுக்கு உணவு அளிப்பது தான். உணவுக்காக இங்கு வரும் மயில்கள் டிரான்ஃபார்மரில் உட்காரும்போது, மின்சாரம் தாக்கி இறந்து விடுகின்றன. இதுகுறித்து ஏற்கனவே நாங்கள் மின்வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். நமது தேசிய பறவையான மயில்களை இறப்பை தவிர்க்க டிரான்ஃபார்மர்களுக்கு வலை போட வேண்டும். அதற்கான நடவடிக்கையை மின்வாரியம் எடுத்து வருகிறது. ஆகையால், இப்பிரச்னைக்கு விரைவில் உரிய தீர்வு கிடைக்கும்,'' என்று கூறினர்.

