ADDED : ஜன 27, 2024 02:28 AM
வேலுார்:வேலுார் மாவட்டம், கே.வி.குப்பத்தை சேர்ந்தவர் கீதா, 50. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ், 52, என்பவருக்கும், 2003ல் திருமணமானது; குழந்தைகள் இல்லை. இதனால், கடந்த நவ., 2023ல், குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தனர். திருமணம் சான்றிதழ் வாங்க, 2023 நவ., 19ல், கே.வி.குப்பம், சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றனர்.
அப்போது, பெண் சார் - பதிவாளர் கவிதா, இந்த தம்பதியை ஜாதி பெயரை சொல்லி, இரண்டு மணி நேரம் அலைக்கழித்து, சான்றிதழ் இல்லை என கூறி, மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
கடந்த நவ., மாதம், மாவட்ட எஸ்.பி., அலுவலகம், கலெக்டர், மற்றும் கே.வி., குப்பம் போலீசில், சார் பதிவாளர் மீது அந்த தம்பதி புகார் அளித்தனர்.
அப்போதே எஸ்.ஐ., ஜெயக்குமார், வழக்கு பதிவு செய்த நிலையில், தற்போது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சார் - பதிவாளர் கவிதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

