/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கலெக்டர் அலுவலகத்தில் ஒப்பந்ததாரர் புகார் மனு
/
கலெக்டர் அலுவலகத்தில் ஒப்பந்ததாரர் புகார் மனு
ADDED : மே 01, 2024 01:46 AM

விழுப்புரம் : விழுப்புரம் தாட்கோ ஒப்பந்த பணியில் பல லட்சம் முறை கேடு நடந்துள்ளதாகவும், அதற்கு காரணமான அதிகாரி, ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட கான்ட்ராக்டர் புகார் மனு அளித்தார்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், அரசு ஒப்பந்ததாரரான பொய்யப்பாக்கத்தை சேர்ந்த பாஸ்கர், 47; அளித்துள்ள மனு:
விழுப்புரம் கலெக்டர் அலுவலக முதல்நிலை ஒப்பந்ததாரராக உள்ளேன். கடலுார் மாவட்டம், நஞ்சமுகத்துவாழ்க்கையில் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில், 3.7.2020ம் தேதி டெண்டர் விடப்பட்ட ஆதிதிராவிடர் நல அரசு நடுநிலை பள்ளியின் 8 வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு ஒப்பந்தம் எடுத்தேன்.
இதற்காக ஜி.எஸ்.டி., உள்ளிட்ட மொத்தம் மதிப்பீடு 1 கோடியே 8 லட்சத்து, 34 ஆயிரம் மதிப்பில் ஒப்பந்தம் எடுத்து, பணியை மேற்கொண்டே ன். 17.11.2020ம் தேதி பணி ஆணை வழங்கப்பட்டது.
தொடர்ந்து கட்டுமான பணிகள் நடந்தது. பணி முடிக்கும் வகையில் 11.2.2021ம் தேதி வரை பணி வேகமாக நடந்தது. முதல் தளம் வரை பணி நடந்த நிலையில், இந்த வேலைக்கு, அப்போதைய தாட்கோ செயற் பொறியாளர் பல இடையூறுகளைக் கொடுத்து, பொய் தகவலை கூறி, என் பெயரை கருப்பு பட்டியலிலும் சேர்த்துவிட்டார். கொரோனா காலத்திலும், திட்டமிட்டபடி கட்டட வேலையை முடித்துகொடுத்தேன்.
என் ஒப்பந்தத்தை ரத்து செய்தபோதும், மறு டெண்டர் போன்ற விதிகள்படி எதையும் செய்யவில்லை. ஆனால், அவரது பினாமி பெயரில் விதிமீறி, மீதி கட்டுமான பணியை தொடர செய்தார்.
அவருக்கு 4 தவணை தொகை நவம்பர் 2023 வரை, 80.91 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளனர்.
இந்த கட்டுமானப் பணியை விதிகள் மீறி செய்தும், அதற்கான ஜி.எஸ்.டி., தொகையும் 14.56 லட்சம் ரூபாய் கட்டாமல், விதிமீறல் நடந்துள்ளது.இதுகுறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.