ADDED : மார் 03, 2025 06:25 AM

வானுார்: ஆரோவில்லில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடந்த 'சைக்கிளத்தான்' ஓட்டத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் 57வது உதய தினத்தை முன்னிட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தியும், சைக்கிள் ஓட்டுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'கிரீன் ரைடர்ஸ்' சைக்கிள் குழுமம் சார்பில், சைக்கிளத்தான், நேற்று காலை 4:15 மணிக்கு செர்ட்டி டூயூடு வளாகத்தில் துவங்கியது.
100 கி.மீ., துாரம் கொண்ட ஓட்டத்தில் 28 பேர் பங்கேற்றனர்.
குயிலாப்பாளையம், பொம்மையார் பாளையம், இ.சி.ஆர்., சாலை வழியாக காலாப்பட்டு, கீழ்புத்துப்பட்டு, நெசல், ஒழிந்தியாப்பட்டு, கிளியனுார் வரை சென்று, மீண்டும் புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச்சாலையில் இருந்து புள்ளிச்சப்பள்ளம், இரும்பை, இடையஞ்சாவடி வழியாக செர்ட்டி டூயூடு வந்தடைந்தனர்.
இதே போன்று 50 கி.மீ., துாரத்தில், 102 பேரும், 25 கி.மீ., துாரத்தில் 150 பேரும் பங்கேற்றனர். 50 கி.மீ., குயிலாப்பாளையம், பொம்மையார்பாளையம், இ.சி.ஆர்., சாலை, கீழ்புத்துப்பட்டு, ஒழிந்தியாப்பட்டு வரை சென்று, புதுச்சேரி-திண்டிவனம் புறவழிச்சாலை வழியாக அதே இடத்திற்கு வந்தடைந்தனர்.
25 கி.மீ., ஆரோவில் உட்புற சாலையில் நடந்தது. இதில், சுற்றுலாபயணிகள், இளம் சைக்கிள் ஓட்டக்காரர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும், சான்றிதழ் மற்றும் பதக்கங்களை ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி வழங்கினார்.
ஏற்பாடுகளை கிரீன் ரைடர்ஸ் சைக்கிள் குழும நிர்வாகிகள் செய்திருந்தனர்.