ADDED : ஆக 04, 2024 11:19 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் கம்பன் கழகம் 41ம் ஆண்டு விழா 2வது நாளாக நேற்று முன்தினம் நடந்தது.
எஸ்.கே.ஏ.ஆர்.கே. பவுண்டேஷன் நிறுவனர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
விழாவில் மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் பேசுகையில், 'கம்பன் கழக விழா 41 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் பல ஆண்டுகள் நடைபெற வேண்டும்.
அடுத்த தலைமுறை இதுபோன்ற விழாக்கள் எல்லாம் நமக்கு எதற்கு பயன் தருகின்றன என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அவர்களுக்கு வழிகாட்டுதல்களாக நாம் இருக்க வேண்டும். அவர்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் நாம் இருக்க வேண்டும்.
நமது தமிழ்மொழியில் கம்பர், ராமாயணத்தை சீரும், சிறப்புமாக பல்வேறு கதாபாத்திரங்களைப் படைத்திருக்கிறார். அதையெல்லாம் நாம் மனதில் ஏற்றுக் கொண்டு மனித எண்ணத்தோடு வாழ வேண்டும். அன்போடு, சமத்துவத்தோடு வாழ வேண்டும்' என்றார்.
முன்னதாக தமிழ்வழிக் கல்வியில் பயின்று கொண்டங்கி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகள் கோமதி, மோகனா, தர்ஷினி ஆகியோருக்கு சாலமன் பாப்பையாவின் கல்வி உதவித் தொகையை டாக்டர் முரளிதரன் வழங்கினார்.
தொடர்ந்து, வழக்காடு மன்றம் நடந்தது. விழாவில் முன்னாள் சேர்மன் ஜனகராஜ், எழுத்தாளர் ரவி கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.