/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்திய பயணிகள்; கட்டுக்கடங்காத கூட்டத்தால் பரபரப்பு
/
எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்திய பயணிகள்; கட்டுக்கடங்காத கூட்டத்தால் பரபரப்பு
எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்திய பயணிகள்; கட்டுக்கடங்காத கூட்டத்தால் பரபரப்பு
எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்திய பயணிகள்; கட்டுக்கடங்காத கூட்டத்தால் பரபரப்பு
ADDED : ஜூன் 10, 2024 01:33 AM
விருத்தாசலம் : கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பயணிகளே ரயிலை நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.
சென்னை - திருச்சி ரயில்வே மார்க்கத்தில், விருத்தாசலம் வழியாக தினசரி 50க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. வாரவிடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் தென் மாவட்டங்களுக்கு ரயில்களில் செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், நேற்று முன்தினம் மாலை 5:20 மணிக்கு புறப்பட்ட கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (12633) ரயிலில் வழக்கத்திற்கு மாறாக பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் பயணிகள் ஏறியதால் பயணிகளுக்கு நிற்க கூட இடமில்லாத நிலை ஏற்பட்டது.
இரவு 8:45 மணிக்கு, விருத்தாசலம் ரயில் நிலையத்தை கடந்து சென்றபோது, பயணிகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இரவு 9:30 மணிக்கு ரயில் அரியலுார் அடுத்த செந்துறை அருகே சென்றபோது, கூட்ட நெரிசலால் அவதிப்பட்ட பயணிகள் சிலர், அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.
அவர்களிடம் லோகோ பைலட், ரயில்வே பாதுகாப்புப்படையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, 25 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. இரவு 10:00 மணிக்கு ரயில், அரியலுார் சென்றடைந்தது. அங்கு, பயணிகள் பலரை இறக்கி, பின்னால் வந்த ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அளவுக்கு அதிகமான கூட்டம் காரணமாக பயணிகளே ரயிலை நிறுத்திய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.