ரயில்வே சுரங்க பாதைப்பணி தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
ரயில்வே சுரங்க பாதைப்பணி தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
ADDED : ஜூன் 02, 2026 09:22 PM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பொதுமக்கள் ரயில்வே சுரங்கப் பாதை பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கோலியனுார் அடுத்த குச்சிப்பாளையம் கிராமத்தில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த கேட்டை கடந்து விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை டிராக்டர் டிப்பரில் விழுப்புரத்திற்கு கொண்டு செல்கின்றனர். மேலும், ஏராளமான பொதுமக்களும் ரயில்வே கேட்டை கடந்து செல்கின்றனர்.
ரயில் வரும் நேரங்களில் கேட் மூடப்பட்டால் நீண்ட நேரம் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை உள்ளது. தினமும் இதுபோன்ற நிலை ஏற்படுவதைத் தவிர்க்க தெற்கு ரயில்வே நிர்வாகம், இந்த ரயில்வே கேட்டிலிருந்து 200 மீட்டர் துாரம் தள்ளி ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு முடிவு செய்தது.
இங்கு விவசாய நிலங்கள் இருப்பதால் ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்திலே சுரங்கப் பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த பாதை வரைபடத்தில் யூ வடிவில் சுரங்கவழி பாதை செல்வதால், அந்த வளைவு இருளாக இருக்கும் என இங்குள்ள கிராம மக்கள் கருதுகின்றனர்.
சுரங்கப் பாதையை யூ வடிவில் இல்லாமல் நேராகவே அமைக்க வேண்டும். இடம் தேவைப்படால் தனிநபர்களிடம் வாங்கக் கோரி கிராம மக்கள், சுரங்கப்பாதை பணிகளை துவங்க விடாமல் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சுரங்கப்பாதை பணியை துவங்க நேற்று காலை 11:40 மணிக்கு குச்சிப்பாளையத்தில் ஊழியர்கள் பொருட்களை இறக்கிய போது, கிராம மக்கள் தடுத்து நிறுத்தி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு தண்டவாளத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த விழுப்புரம் தாசில்தார் யுவராஜ் மற்றும் வளவனுார் போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், ரயில்வே நிர்வாகம் சம்மந்தப்பட்ட பணிகளை தடுப்பது குற்றமாகும். ரயில்வே நிர்வாகத்திடம் பேசி முடிவு செய்யப்படும் என கூறியதன் பேரில், 12:20 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர்.
