/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் தற்காலிக அருங்காட்சியகம்; கட்டடம் வழங்க துறை சார்பில் கோரிக்கை
/
விழுப்புரத்தில் தற்காலிக அருங்காட்சியகம்; கட்டடம் வழங்க துறை சார்பில் கோரிக்கை
விழுப்புரத்தில் தற்காலிக அருங்காட்சியகம்; கட்டடம் வழங்க துறை சார்பில் கோரிக்கை
விழுப்புரத்தில் தற்காலிக அருங்காட்சியகம்; கட்டடம் வழங்க துறை சார்பில் கோரிக்கை
ADDED : செப் 11, 2024 11:11 PM
விழுப்புரம் : விழுப்புரத்தில் தற்காலிக அருங்காட்சியகம் அமைப்பதற்கான கட்டடத்தை தேர்வு செய்து வழங்க வேண்டும் என்று, அருங்காட்சியகங்கள் துறை இயக்குநர் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில், அரசு அருங்காட்சியகம் அமைப்பதற்கான அறிவிப்பு கடந்த 2022ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, கோலியனுார் கூட்ரோடு பனங்குப்பம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடத்தை தேர்வு செய்து, அங்கு அருங்காட்சியகம் அமைக்கலாம் என, விழுப்புரம் கலெக்டர் பழனி, கடந்த டிசம்பர் மாதத்தில், அரசுக்கு பரிந்துரை செய்தார். இதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கிடையில், கடந்த மாதம் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்தென்னரசை, விழுப்புரம் அருங்காட்சியகம் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் நேரில் சந்தித்து, விழுப்புரம் அருங்காட்சியகப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்.
அந்தப் பணிகள் முடியும் வரை விழுப்புரத்தில் வாடகை கட்டிடத்தில் தற்காலிக அருங்காட்சியகம் துவங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்.
இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க அருங்காட்சியகங்கள் துறை இயக்குநருக்கு, அமைச்சர் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அரசு அருங்காட்சியகங்கள் துறை இயக்குநர் கவிதா ராமு, விழுப்புரம் கலெக்டருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், விழுப்புரம் மாவட்டத்திற்கான அரசு அருங்காட்சியகம் அமைப்பதற்கு, விழுப்புரம் அருகே உள்ள பனங்குப்பம் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இங்குப் புதிய அருங்காட்சியகத்திற்கானப் பணிகள் தொடங்கி முடியும் வரை, கட்டிடம் ஒன்றில் தற்காலிக அருங்காட்சியகத்தைத் தொடங்கிடலாம் என்றும், இதற்காக 2,400 சதுர அடி பரப்பளவுள்ள கட்டிடத்தைத் தேர்வு செய்து தருமாறும் அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்காலிக அருங்காட்சியகம் அமைய உள்ள இடம், பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் போக்குவரத்து, சாலை வசதியுள்ளதாக இருக்கவும், புதிய கட்டிடப்பணிகள் முடிவடைந்தவுடன், மாவட்ட நிர்வாகத்திடம் தற்காலிக கட்டிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.
அந்த இயக்குநரின் கடிதத்தை, கடலூர் அருங்காட்சியக காப்பாட்சியர் ஜெயரத்னா நேற்று, விழுப்புரம் கலெக்டர் பழனியை சந்தித்து வழங்கினார்.
அதனை பெற்ற கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். அப்போது, விழுப்புரம் அருங்காட்சியக கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் உடனிருந்தார்.