/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொடர் வழிப்பறி: உ.பி.,யில் 3 பேர் சுற்றி வளைப்பு
/
தொடர் வழிப்பறி: உ.பி.,யில் 3 பேர் சுற்றி வளைப்பு
ADDED : மே 24, 2024 12:14 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள், மூன்று பேரை, தீரன் அதிகாரம் 1 சினிமா பாணியில், போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் பகுதியில் சமீப காலமாக வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு குற்றங்கள் அதிகரித்து வந்தன. எஸ்.பி., தீபக் சிவாச் உத்தரவில், சப் - இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தராஜ், பாண்டியன், ஏட்டுகள் மகாராஜா, சக்திவேல், அபிஸ், இளங்கோவன், இப்ராகிம் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், வழிப்பறியில் ஈடுபட்டது உத்தர பிரதேச மாநில கொள்ளையர்கள் என்பது தெரிந்தது.
அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் கடந்த 15ம் தேதி, உத்தர பிரதேசம் சென்றனர். அங்குள்ள அம்ரோஹா மாவட்டத்தில் பதுங்கியிருந்த சதாப், 35, இர்பான், 42, ஆகியோரை கைது செய்தனர். இவர்களின் கூட்டாளியான டில்லியை சேர்ந்த அலாவுதீன் அலி, 27, ஆகியோரை கைது செய்தனர்.
மூவரையும் நேற்று விழுப்புரம் அழைத்து வந்தனர். அவர்கள் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து, மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.