/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொன்முடி குவாரி வழக்கில் முதன்மை செயலர் சாட்சியம்
/
பொன்முடி குவாரி வழக்கில் முதன்மை செயலர் சாட்சியம்
ADDED : ஜூலை 31, 2024 11:38 PM

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம், பூத்துறை குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து முறைகேடு செய்ததாக, அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி உட்பட 8 பேர் மீது 2012ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரும் இவ்வழக்கில் மொத்தமுள்ள, 67 சாட்சிகளில், நேற்று முன்தினம் வரை, 44 பேர் விசாரிக்கப்பட்டனர்.
நேற்றைய விசாரணையின் போது, அரசு தரப்பு சாட்சியான விழுப்புரம் முன்னாள் கலெக்டரும், தற்போதைய வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை முதன்மை செயலருமான பிரஜேந்திர நவ்நீத் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அப்போது அவர், வானுார் தாசில்தார், விழுப்புரம் ஆர்.டி.ஓ., கனிம வளத்துறை உதவி இயக்குனர் ஆகியோர் கொடுத்த அறிக்கை மற்றும் சமர்பித்த ஆவணங்களை பரிசீலனை செய்து, 2007 மார்ச் 21ம் தேதி ஜெயச்சந்திரன் பெயரிலும், அதே ஆண்டு அக்., 4ம் தேதி கவுதமசிகாமணி பெயரிலும் குவாரி உரிமத்திற்கு அனுமதி வழங்கியதாக தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம், கவுதமசிகாமணி, ஜெயச்சந்திரன் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்தனர். அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி பூர்ணிமா, விசாரணையை வரும் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.