/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் - மரக்காணம் நான்கு வழிச் சாலை பணி ஜரூர்
/
திண்டிவனம் - மரக்காணம் நான்கு வழிச் சாலை பணி ஜரூர்
திண்டிவனம் - மரக்காணம் நான்கு வழிச் சாலை பணி ஜரூர்
திண்டிவனம் - மரக்காணம் நான்கு வழிச் சாலை பணி ஜரூர்
ADDED : மே 24, 2024 05:47 AM

மரக்காணம்: திண்டிவனம் - மரக்காணம் சாலை சந்திப்பில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நான்கு வழிச்சாலை பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் 32 கி.மீ., இருவழி சாலை மிகவும் பழமை வாய்ந்த கிருஷ்ணகிரி சாலை ஆகும். இந்த சாலை வழியாக கடந்த 20 ஆண்டுகளாக வாகன போக்குவரத்து, அதிகரித்ததால், திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்ல ஒன்றரை மணிநேரம் ஆகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வந்தனர். மேலும் திருச்சி - சென்னை மற்றும் புதுச்சேரி - பெங்களூரு, புதுச்சேரி இ.சி.ஆர்., வழியாக சென்னை போன்ற சாலைகளில் ஏதேனும் திடீரென விபத்துகள் ஏற்பட்டால், அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அது போன்ற நேரங்களில் அதிகாரிகள் இந்த சாலை வழியாக போக்குவரத்தை மாற்றி விடுவார்கள். அந்த நேரத்தில் இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்ல சிரமமாக இருக்கும்.
அதனால் இந்த இருவழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்ற அரசு முடிவு செய்து, கடந்த 2021-22ம் ஆண்டு முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் 238 கோடி ரூபாய் நிதி ஒதிக்கீடு செய்தது.
மேலும் 32 கி.மீ., துார சாலையை இரண்டு பிரிவாக பிரித்து ஒப்பந்தம் கோரப்பட்டது. அதன் படி இந்த சாலைப் பணியை 2 ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இந்த சாலைப் பணிகளை முடித்தாக வேண்டும் என்ற அதிகாரிகளின் உத்தரவால் சாலை பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சாலையில் இருந்த 67 சிறிய, பெரிய பாலங்களை அகற்றி புதிய பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. மேலும் சாலையோரம் உள்ள நீர்பிடிப்பு கிராமங்களில் 10 புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளது.
மரக்காணம் - திண்டிவனம் இணைப்பு சாலை பகுதி, எண்டியூர், நல்லாளம், பிரம்மதேசம், முருக்கேரி, கந்தாடு, மரக்காணம் உட்பட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் சாலையின் இருபுறமும் மழை நீர் வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டுள்ளது.
திண்டிவனம் மின்துறை அலுவலகம் எதிரே செல்லும் மரக்காணம் - புதுச்சேரி - திண்டிவனம் சாலை சந்திப்பு, பகுதியில் ஆக்கிரமிப்பால், விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது.
அந்த பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை கடந்த சில தினங்களுக்கு முன் அதிகாரிகள் அகற்றினர். அந்த பகுதியில் தற்போது சாலை விரிவாக்கப் பணிக்கான அளவீடுகள் நடந்து வருகிறது.