/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இறகுப் பந்து விளையாட்டில் விழுப்புரம் மாணவர் சாதனை
/
இறகுப் பந்து விளையாட்டில் விழுப்புரம் மாணவர் சாதனை
இறகுப் பந்து விளையாட்டில் விழுப்புரம் மாணவர் சாதனை
இறகுப் பந்து விளையாட்டில் விழுப்புரம் மாணவர் சாதனை
ADDED : செப் 05, 2024 05:32 AM

விழுப்புரம்: இரண்டு ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்ட கோப்பைகள், பதக்கங்களை வென்று, விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர் இறகுப்பந்து போட்டியில் சாதித்து வருகிறார்.
விழுப்புரம் அருகே காணை கிராமத்தை சேர்ந்தவர் கோகுல்-ராஜஸ்ரீ தம்பதி. இவரது மகன் கோவிந்த்கிருஷ்ணன்,13; இவர், விழுப்புரம் ஜெயேந்திரா சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
விழுப்புரத்தில் உள்ள சதா பேட்மிட்டன் அகாடமியில் பயிற்சி பெற்று விளையாடி வரும் கோவிந்த் கிருஷ்ணன், இரண்டு ஆண்டுகளில், ஏராளமான இறகு பந்து போட்டிகளில் கலந்துகொண்டு, சாதாரண உள்ளூர் போட்டிகள் முதல் மாநில அளவு வரை, 100க்கும் மேற்பட்ட கோப்பைகளையும், பதக்கங்களையும் வென்று சாதித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளில், தமிழக அளவில் நடந்த பல்வேறு இறகு பந்துப் போட்டிகளில் பங்குபெற்று, முதல் மற்றும் இரண்டாம் இடங்களை வென்று குவித்துள்ளார். குறிப்பாக 15 வயதுக்குட்பட்ட பிரிவில் விளையாடி, 50க்கும் மேற்பட்ட கோப்பைகளையும், 20க்கும் மேற்பட்ட பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்று சாதித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட இறகுப்பந்து கழக செயலரும், கோவிந்தகிருஷ்ணனின் பயிற்சியாளருமான பாபு கூறுகையில், தமிழ்நாடு பேட்மிட்டன் அசோசியேசன் நடத்திய மாநில அளவிலான போட்டிகளில், குறிப்பாக மதுரை, தஞ்சாவூரில் நடந்த போட்டிகளில் கால் இறுதிக்கும் முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
மேலும், பல்வேறு மாவட்டங்களில், பள்ளியளவில் நடத்தப்படும் மாவட்டம் மற்றும் மாநில அளவிலான இறகுப் பந்து போட்டிகளில் இவர் பங்கேற்று, முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.
இரண்டு ஆண்டுகளாக நமது அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். வரும் காலங்களில் மாநில மற்றும் தேசிய அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுவதில் உறுதியாக பயிற்சி எடுத்து வருகிறார் என்றார்.
சாதனை தொடர நிதி உதவி வேண்டும்
சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கோவிந்த்கிருஷ்ணன், ஒவ்வொரு போட்டிக்கும் வெளியூர்களுக்குச் சென்று தங்கி பங்கேற்பதால் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் செலவாகிறது.
அதனை அவரது குடும்பத்தினர் செலவிட்டு, கஷ்ட நிலையில் தவித்து வருகின்றனர். இவரது விளையாட்டு திறனை ஊக்கப்படுத்திடும் வகையில், அரசோ, தொண்டு நிறுவனங்களோ நிதி உதவி வழங்கி உதவினால், அவரது சாதனை மேலும் தொடரும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.