ADDED : ஆக 26, 2026 07:03 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
வானுார் அருகே கரசானுார் பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு தனியார் நிறுவனத்திற்கு பணிக்கு செல்வதற்காக 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், பஸ்சிற்காக காத்திருந்தார். அப்போது, அங்கு காரில் வந்த கரசானுார் ஓடை தெருவை சேர்ந்த குமரேசன்,41; பிரபாகரன்,40; ஆகியோர் அந்த பெண்ணிடம் சென்று, ‘நீங்கள் பணிபுரியும் நிறுவனம் வழியாக தான் செல்கிறோம் என்றும், உங்களை நிறுவனத்தில் இறக்கி விடுகிறோம்’ எனக்கூறி, காரில் கடத்தி சென்று சுடுகாட்டு பாதையில் காரை நிறுத்தி அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர்.
இது குறித்து பாதித்த பெண், வானுார் போலீசாரிடம் புகார் அளித்தார். இதன் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து குமரேசன், பிரபாகரன் ஆகியோரை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்த வழக்கு விசாரணையின் போது, இருவரும் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தனர். இதையடுத்து, இவர்கள் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இவர்களை கைது செய்து ஆஜர்படுத்தும்படி, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையொட்டி, இருவரையும் போலீசார் வலைவீசி தேடினர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் குமரேசன், பிரபாகரன் ஆகியோரை வானுார் போலீசார் கைது செய்தனர். பின், இருவரையும் விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின் நீதிமன்றம் உத்தரவின் பேரில், இருவரும் வேடம்பட்டு சிறைசாலையில் அடைக்கப்பட்டனர்.
