/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மழை வெள்ளத்தால் 2,880 வீடுகள் பாதிப்பு: 3 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதம்
/
மழை வெள்ளத்தால் 2,880 வீடுகள் பாதிப்பு: 3 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதம்
மழை வெள்ளத்தால் 2,880 வீடுகள் பாதிப்பு: 3 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதம்
மழை வெள்ளத்தால் 2,880 வீடுகள் பாதிப்பு: 3 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதம்
ADDED : டிச 09, 2024 07:14 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழையால், 3 லட்சம் ஏக்கர் விவசாய பயிர்கள் சேதமடைந்தன.
விழுப்புரம் மாவட்டத்தில், ஏற்பட்ட பெஞ்சல் புயலால் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட சேத மதிப்புகளை ஆய்வு செய்வதற்காக, மத்திய அரசின் அதிகாரிகள் குழுவினர் நேற்று முன்தினம், விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்தனர்.
முன்னதாக, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், மாநில அரசு அதிகாரிகள் தரப்பில், வெள்ள பாதிப்புகள் குறித்து விளக்கப்பட்டது.
அதில், மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக 16 பேர் இறந்துள்ளனர். 42 மாடுகள், 440 ஆடுகள், 151 கன்றுக்குட்டிகள் இறந்தன. பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்ததால், 2,500 வீடுகள் பகுதியாக சேதமடைந்தன. 380 வீடுகள் முழுமையாக சேதமடைந்தன.
இதேபோல் வெள்ள நீரில் மூழ்கி, 2 லட்சத்து ஆயிரத்து 400 ஏக்கர் விளைநிலங்கள் முழுமையாகவும், ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 715 ஏக்கர் விளைநிலங்கள் 33 சதவீதத்திற்கு மேலாக சேதமடைந்துள்ளது. இதனால் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 486 விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
தோட்டக்கலைத் துறையில் 71 ஆயிரத்து 275 ஏக்கர் தோட்டப் பயிர்கள் முழுமையாகவும், 4 ஆயிரம் ஏக்கர் தோட்டப்பயிர்கள் 33 சதவீதத்திற்கு மேலாகவும் பாதிப்புக்குள்ளானது. இதனால், 13 ஆயிரத்து 857 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடலோர பகுதிகளில் 28 மீன் வலைகள், 12 பண்ணை குட்டைகள், 35 படகுகள் சேதமடைந்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 26 சாலைகள் (348 கி.மீ., துாரம்) சேதமடைந்துள்ளது. மேலும், 39 அரசு கட்டடங்கள் சேதமடைந்தன. நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 69 ஏரிகள் உடைந்தன. மேலும் 41 ஏரிகள் முழுமையாக நிரம்பி வழிந்தும், 37 மதகு மற்றும் கோடி கட்டடங்களும், 17 அணைக்கட்டுகளும் சேதமடைந்துள்ளது.
இதேபோல், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 105 கி.மீ., சாலைகளும், 22 பாலங்களும், 1,150 மின் விளக்கு கம்பங்களும், 62 பம்பு செட்டுகளும் சேதமடைந்தன. பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 40 கி.மீ., சாலைகளும், 207 தெரு மின் விளக்குகளும் சேதமடைந்துள்ளது.
கனமழை காரணமாக 209 மின் டிரான்ஸ்பார்மர்களும், 3,671 மின் கம்பங்களும், 281 கி.மீ., நீளத்திற்கு மின்கம்பிகளும் சேதமடைந்தன.
மழையால் பாதித்த மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக 299 முகாம்கள் அமைக்கப்பட்டு, 21 ஆயிரத்து 897 பேர் தங்க வைக்கப்பட்டனர். மேலும், 12 பொது சமையற்கூடங்கள் அமைத்து, 4.62 லட்சம் நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
அரசு சார்பில், 63 ஆயிரத்து 825 பேருக்கு 5 கிலோ அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை வெள்ள நிவாரணமாக வழங்கப்பட்டது. மேலும், 627 மருத்துவ முகாம்கள் அமைத்து, பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டது. 10 மாநில பேரிடர் மீட்புப்படை குழுவினர் மற்றும் 6 தேசிய பேரிடர் மீட்புப்படை குழுவினர் ஒருங்கிணைந்து செயல்பட்டனர்.
இவர்கள் மூலம், வெள்ள பாதிப்பு பகுதிகளிலிருந்து 6,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கனமழை பாதிப்பின்போது, 21 ஆயிரத்து 180 அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீட்புப் பணி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
மேலும், மழை வெள்ள பாதிப்பு சேதங்கள், மீட்பு நடவடிக்கைகள், நிவாரணப் பொருட்கள் வழங்கிய விபரங்கள் வீடியோ பதிவுகளாக தொகுத்து, மத்திய அரசு குழுவினர் பார்வைக்கு காண்பிக்கப்பட்டது.