மக்களின் கோரிக்கைகள் மீது தாமதமின்றி... நடவடிக்கை! அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை
மக்களின் கோரிக்கைகள் மீது தாமதமின்றி... நடவடிக்கை! அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை
UPDATED : ஜூன் 23, 2026 03:26 PM
ADDED : ஜூன் 23, 2026 03:20 PM

விழுப்புரம்: 'பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது அலுவலர்கள் தாமதமின்றி, நடவடிக்கை எடுக்க வேண்டும்' கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுரை வழங்கினார். விழுப்புரம் மாவட்ட அளவிலான, அனைத்து துறை செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது. விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஆனந்த் குமார் சிங் முன்னிலை வகித்தார். மாவட்ட அளவிலான அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், சட்டம் - ஒழுங்கு, போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமை தடுப்புச்சட்டம் தொடர்பான நிவாரண நடவடிக்கைகள். வீட்டுமனைப்பட்டா வழங்குதல், மாணவ, மாணவிகளின் விடுதி கட்டடங்கள்.
வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில், விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் மீது தீர்வுகள். டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு, உழவர் சந்தைகள் மற்றும் மின்னணு தேசிய வேளாண் சந்தை செயல்பாடுகள். கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் தெருநாய்களின் இனப்பெருக்க கட்டுப்பாடு மற்றும் வெறிநோய் தடுப்பூசி திட்டம். மாவட்ட கண்காணிப்புக் குழு மூலம் தெரு நாய்களுக்கு மேற்கொள்ளப்படும் கருத்தடை விபரங்கள். கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்கள், தீவனக்கிடங்குகள், உள்நாட்டு மீன்வள வளர்ச்சி.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் நேரடி நெல் கொள்முதல் செயல்பாடுகள். பொது விநியோகம் திட்டம், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்குவதை விரிவுபடுத்துவது.
சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில் தாய், சேய் இறப்பு விகிதம், போதை மறுவாழ்வு மையங்களின் செயல்பாடு.
உயர்கல்வித் துறை சார்பில், மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்கள் 100 சதவீதம் உயர் கல்வியில் சேர்வதை உறுதி செய்வது. கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக்குகள், கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கை விபரங்கள். சிங்கப்பெண் திட்டம்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், அனைவருக்கும் குடிநீர் வழங்குதல். பாதாள சாக்கடைத் திட்டம், திடக்கழிவு மேலாண்மை. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் இணைய வழி சான்றிதழ்கள், சமூக பாதுகாப்பு திட்டங்கள். வீட்டுமனைப்பட்டா, இணையவழி பட்டா மாறுதல், பேரிடர் மேலாண்மை செயல்பாடுகள்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் அனைத்து கிராமங்களிலும் குடிநீர் வழங்குதல். சாலை வசதிகள், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, பள்ளிக்கல்வித் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என அனைத்து துறை செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், 'அரசின் நலத்திட்டங்கள் குறித்த பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது அலுவலர்கள் தாமதமின்றி, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அறிவுறுத்தினார்.
