/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெள்ள பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க ஆலோசனை! தொழில்நுட்பத்தை பின்பற்றினால் மகசூல் அதிகரிக்கும்
/
வெள்ள பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க ஆலோசனை! தொழில்நுட்பத்தை பின்பற்றினால் மகசூல் அதிகரிக்கும்
வெள்ள பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க ஆலோசனை! தொழில்நுட்பத்தை பின்பற்றினால் மகசூல் அதிகரிக்கும்
வெள்ள பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க ஆலோசனை! தொழில்நுட்பத்தை பின்பற்றினால் மகசூல் அதிகரிக்கும்
ADDED : நவ 13, 2025 09:09 PM

விழுப்புரம் : மாவட்டத்தில் பருவமழை வெள்ளப் பெருக்கின்போதுஏற்படும் சேதங்களை தடுக்கவும், பயிர்களை பாதுகாத்துக்கொள்ளவும் விவசாயிகளுக்கு, வேளாண் துறை அதிகாரிகள்அறிவுரை வழங்கியுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி பரவலாக பெய்து வருகிறது. ஆண்டுதோறும், வடகிழக்கு பருவமழை காலத்தில் புயலினாலும், தொடர் கனமழையினாலும், போதிய வடிகால் வசதி இல்லாத சூழ்நிலையாலும் வயலில் மழைநீர் அளவுக்கு அதிகமாக தேங்கி பயிர்கள் சேதமடைகின்றன. இதனால், ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த வெள்ள பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க வேளாண் துறை அதிகாரிகள், தொழில் நுட்பம் முறையிலான அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
பருவமழையின்போது நெல் வயல்களில் போதிய வடிகால் வசதி ஏற்படுத்தி நீர் தேக்கத்தை குறைக்க வேண்டும். தரைமட்டத்திலிருந்து 90 செ.மீ., ஆழத்தில் வடிமுனை குழாய்களை அமைத்து நீரை வெளியேற்றினால் காற்றோட்டம் சீரடையும்.
மழைநீர் வடியும்போது நீருடன் மண்ணில் உள்ள தழைச்சத்து, சுண்ணாம்பு, மக்னீசியம், போரான், கந்தகம் மற்றும் சாம்பல் சத்து கரைந்து வெளியாகிவிடும். இதனால் சத்துக்கள் பற்றாக்குறை ஏற்படும். மழைநீர் வடிந்ததும் தழைச்சத்து உரத்தை அம்மோனிய வடிவில் போட வேண்டும்.
யூரியா போடுவதாக இருந்தால் யூரியாவுடன் ஜிப்சம், மணல் 1:3:5 என்ற விகிதத்தில் கலந்து ஒருநாள் வைத்திருந்து மறுநாள் போட வேண்டும். டி.ஏ.பி., 2 சதவீதம் இலைவழியாக தெளிக்கலாம்.
மழை வெள்ளம் காரணமாக மூழ்கிய நெற்பயிரை காக்க நீர் வடிந்த பின், இலைகள் அழுகிடாமல் இருப்பின் 2 சதவீத டி.ஏ.பி., மற்றும் ஒரு சதவீத பொட்டாஷ் மற்றும் ஒரு சதவீத யூரியா, 0.5 சதவீத துத்தநாக சல்பேட் கரைசலை 10 மற்றும் -15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
மகசூல் இழப்பிலிருந்து பயிர்களை காப்பாற்ற 4 கிலோ டி.ஏ.பி., உரத்தினை 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாள் ஊறவைத்து மறுநாள் வடிகட்டி கரைசலுடன் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ பொட் டாஷ் உரத்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
மண்ணில் உள்ள நன்மை தரும் நுண்ணுயிர்களின் வளர்ச்சி சீரடைந்து, பயிருக்கு ஊட்டச்சத்து அளிக்க அதிக மழை, வெள்ளம் எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் எக்டருக்கு 2 டன் உமிக்கரியை நடும் முன் நிலத்தில் இட்டு மண்ணுடன் கலக்குவதால் நிலத்தின் வெப்பம் சீராக்கப்பட்டு ஊட்டச்சத்துகள் பயிர்களுக்குத் தடையின்றி கிடைக்க வழிவகுக்கும்.
மேலும், மேகமூட்டமான சீதோஷ்ணநிலை காரணமாக பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்படும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது. இதனால், வேம்பு சார்ந்த மருந்துகளை உபயோகப்படுத்த வேண்டும். நோய் தாக்குதலை கட்டுப் படுத்த 1 கிலோ சூடோமோனாஸ், 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து வயலில் போட வேண்டும்.
குளிர்ச்சியான தட்பவெப்ப சூழ்நிலைகளால் பயிர்களின் வளர்ச்சி பாதிப்படைவதை தடுக்க யூரியா, ஜிப்சம், வேப்பம் புண்ணாக்கு 5:4:1 விகிதத்தில் கலந்து இடுதல் வேண்டும்.
தொடர் மழைக்கு பின், படைப்புழு மற்றும் கூண்டுப் புழுக்களை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 400 மில்லி குளோரிபைரிபாஸ் பூச்சிக்கொல்லியினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரத்தில் பயிர் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், வெள்ளப் பெருக்கின்போது, வேளாண் அதிகாரிகளின் அறிவுரைகளை பின்பற்றி விவசாய பயிர்களை பாதுகாத்து கொள்ளலாம்.

