விழுப்புரத்தில் பாதாள சாக்கடை பைப் லைன்களில்... அடைப்பு:ரூ.15 லட்சத்தில் புதிதாக புதிக்கும் பணி துவங்கியது
விழுப்புரத்தில் பாதாள சாக்கடை பைப் லைன்களில்... அடைப்பு:ரூ.15 லட்சத்தில் புதிதாக புதிக்கும் பணி துவங்கியது
UPDATED : ஜூன் 28, 2026 08:30 PM
ADDED : ஜூன் 28, 2026 08:20 PM

விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் பாதாள சாக்கடை பைப்புகளில் அடைப்பு ஏற்பட்டதால் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பைப்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சேகரிப்பதற்காக 14 ஆயிரத்து 150 குடியிருப்புகளை இணைத்து 165.688 கி.மீ., நீளத்திற்கு 263 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்றது.
இதன் மூலம் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டு, சாலாமேடு பகுதியில் 26.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
இந்த பாதாள சாக்கடை பணிகள் இணைப்பு விழுப்புரம் நகரில் 37 வார்டுகளுக்கு மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, கடந்த 2011ம் ஆண்டு நகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பானாம்பட்டு, சாலாமேடு, வழுதரெட்டி, எருமனந்தாங்கல், காகுப்பம் ஆகிய 5 ஊராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்த பணிகள், தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் 65.75 கோடி ரூபாய் மானியமாகவும், தனியார் வங்கி மூலம் 163.58 கோடி ரூபாய் கடனாக பெறப்பட்டும், நகராட்சி பங்கு தொகை 33.67 கோடி ரூபாய் சேர்க்கப்பட்டு பணிகள் நடந்தது.
இதில், 7,018 ஆள் இறங்கு குழிகளில் பைப் லைன்கள் புதைக்கப்பட்டு பாதாள சாக்கடை மேன்ேஹால்களுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் ரெட்டியார் மில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள கிழக்கு பாண்டி ரோடு சாலையில் 20 அடிக்கும் கீழே பைப் லைன்கள் புதைக்கப்பட்டு பாதாள சாக்கடை கழிவு நீர் செல்கிறது.
இதில் உள்ள 41 மீட்டர் அளவுள்ள பைப் லைன்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின்றி கிழக்கு பாண்டி ரோடு, பானாம்பட்டு பாதை, சுபிக் ஷா கார்டன், மகாராஜபுரம் பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடை மேன்ேஹாலில் கழிவுநீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் துர்நாற்றம் வீசியது.
இதை கருத்தில் கொண்டு, நகராட்சி நிர்வாகம் பொது நிதியின் கீழ், 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ரெட்டியார் மில் பஸ் நிறுத்தம் அருகே கிழக்கு பாண்டி ரோடு சாலையின் கீழ்புறத்தில் 20 அடிக்கும் கீழே உள்ள அடைப்பு ஏற்பட்டுள்ள பைப் லைன்களை அகற்றும் பணிகள் நேற்று முன்தினம் துவங்கியது.
ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் தோண்டப்பட்டு பழைய பைப் லைன்கள் அகற்றப்பட்டு, புதிதாக 41 மீட்டர் பைப் லைன்கள், 6.50 மீட்டர்களாக பிரித்து பொருத்தும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.
இந்த பணிகள் நடைபெறுவதையொட்டி, விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் அந்த இடங்களுக்கு பேரிகார்டுகள் வைத்து மறிக்கப்பட்டு, ஒருவழி பாதையில் வாகனங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதனால் அங்கு மட்டும் வாகன ஓட்டிகள் நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கிறது. இந்த பணிகள் துரிதமாக செய்யப்பட்டு, முடிவடையும் என்றும், இதன் பின், கிழக்கு பாண்டி ரோடு பானாம்பட்டு பாதை, சுபிக் ஷா கார்டன், மகாராஜபுரம் பகுதிகளில் உள்ள 2000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு பாதாள சாக்கடை அடைப்பு பிரச்னை இருக்காது என நகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
