/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வழக்கு சமரச விழிப்புணர்வு பேரணி
/
வழக்கு சமரச விழிப்புணர்வு பேரணி
ADDED : ஏப் 10, 2025 04:50 AM

விழுப்புரம்: சமரச தினத்தையொட்டி விழுப்புரம் மாவட்ட சமரச மையம் சார்பில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் நடந்த பேரணிக்கு முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட நீதிபதி ரகுமான், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் தமிழ்செல்வன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட நீதிபதிகள் இளவரசன், ராஜசிம்மவர்மன், வினோதா, வெங்கடேசன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புஷ்பராணி, முதன்மை சார்பு நீதிபதி கவுதமன், கூடுதல் சார்பு நீதிபதிகள் வரலட்சுமி, தனம், லட்சுமி, வெங்கடேசன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி முருகன், பாலரத்னா, குற்றவியல் நீதித்துறை நடுவர் அரவிந்த்பாரதி உட்பட வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் அரசு சட்டக்கல்லுாரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து, சமரச தின விழிப்புணர்வு கூட்டம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் சென்னை ஐகோர்ட் மூத்த சமரசர் அருணாசலம் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார்.
வானூர்
வானூர் நீதிமன்ற வளாகத்தில் துணை சமரச மையத்தின் சார்பில் நடந்த வழக்கு சமரச தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை வானூர் குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் பிரித்தி தலைமை தாங்கி, பேரணியை துவக்கி வைத்தார்.
சமரசர்கள் தமிழரசன், ஜெயச்சந்திரன், மூர்த்தி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அரசு வழக்கறிஞர் ஆறுமுகம், வழக்கறிஞர்கள் முத்து, சுரேஷ்குமார், தியாகராஜன் பேசினர். நீதிமன்றம் எதிரில் வழக்கு சமரச தீர்வு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பொது மக்களுக்கு வழக்கு சமரச தீர்வு குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. ஆரோபுட் மெயின் ரோடு வழியாக சென்ற இந்த விழிப்புணர்வு பேரணி மீண்டும் நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்தது.
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் நடுவர் நீதிமன்றத்தில், வழக்குகள் சமரச தினத்தை முன்னிட்டு நீதிபதி சத்ய நாராயணன் தலைமை தாங்கி, கோர்ட் வளாகம், கடை வீதிகளில் சமரச தீர்வு முகாம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தினை பொதுமக்களிடம் வழங்கினார். கோர்ட் எழுத்தர்கள் சுகுணா, விஜயா, வழக்கறிஞர்கள் முருகன், பிரகாஷ், குமரேசன், பொன்கோபு, வீரவேல், மோகனகிருஷ்ணன், சதீஷ் உட்பட வழக்கறிஞர்கள் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.
செஞ்சி
செஞ்சியில் சமரச தீர்வு நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நீதிபதிகள் தலைமையில் ஊர்வலம் நடந்தது.
சார்பு நிதிபதி இளவரசி தலைமை தாங்கினார். குற்றவியல் நடுவர் மனோகரன் முன்னிலை வகித்தார். சமரச தீர்வர்கள் வழக்கறிஞர் ராஜேந்திரன், இளஞ்செழியன், கலியமூர்த்தி, ரமேஷ் ஆகியோர் சமரச தீர்வு குறித்து விளக்கி பேசினர்.
பார் அசோசியேஷன் தலைவர் பிரவீன், மூத்த வழக்கறிஞர்கள் ஆத்மலிங்கம், கிருஷ்ணன், புண்ணியகோட்டி மற்றும் வழக்கறிஞர்கள், கோர்ட் ஊழியர்கள், பொது மக்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.