சவுக்கு பயிருக்கு நஷ்டஈடு வழங்குவது எந்த துறை என தெரியாமல் குழப்பம்!: தலைமைச் செயலகம் முன் விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு
சவுக்கு பயிருக்கு நஷ்டஈடு வழங்குவது எந்த துறை என தெரியாமல் குழப்பம்!: தலைமைச் செயலகம் முன் விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு
UPDATED : ஜூன் 19, 2026 05:09 PM
ADDED : ஜூன் 18, 2026 03:20 PM

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம், முழுவதும், மின் கசிவு உள்ளிட்ட பல்வேறு இயற்கை காரணங்களால் 5000 ஏக்கருக்கும் மேற்பட்ட சவுக்கு பயிர்கள் எரிந்து சேதமான நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு எந்த துறை சார்பில் வழங்குவது என்ற குழப்பத்திற்கு தீர்வு காண கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் நெல் கரும்பு, வேர்க்கடலைக்கு அடுத்தபடியாக சவுக்கை அதிகளவில் விவசாயிகள் பயிரிடுகின்றனர். மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால், நெல், கரும்புக்கு மாற்றாக சவுக்கை அதிகளவில் சாகுபடி செய்கின்றனர். மாவட்டத்தில் மட்டும் 40 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் சவுக்கு சாகுபடி செய்யப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், வானுார், மரக்காணம் தாலுகா மற்றும் விழுப்புரம் தாலுகா பகுதிகளில் அதிக அளவில் சவுக்கு பயிரிடப்படுகிறது. விற்பனைக்கு தயரான சவுக்கு மரங்கள், ஈரோடு பள்ளிப்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்திற்கும், தனியார் காகித ஆலைகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சவுக்கு சாகுபடியில் விவசாயிகளுக்கு நல்ல லாபம் இருந்தாலும், வயல்களுக்கு இடையே செல்லும் மின் கம்பிகள் உரசி அல்லது உயர் மின்னழுத்தம் காரணமாக சவுக்கு மரங்கள் அடிக்கடி தீப்பற்றி எரிந்து சேதமாகி வருகிறது.
மாவட்டத்தில் 5000 ஏக்கருக்கும் மேல் சவுக்கு பயிர்கள் எரிந்து சேதமாகியுள்ளது. இதுபோல் மின் கசிவு, மின் கம்பி உரசியால் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் சவுக்கு விவசாயிகளுக்கு அரசு சார்பில் இதுவரை இழப்பீடு மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்படுவதில்லை என விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், மாவட்ட கலெக்டர், சப் கலெக்டர், வேளாண் துறை, வனத்துறை, தோட்டக்கலைத்துறை என பல்வேறு துறைகளுக்கு சவுக்கு எரிந்து சேதமான விவசாயிகளுக்கு நஷ்டு ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அனுப்பியும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சவுக்கு சேதத்திற்காக நஷ்ட ஈட வழங்கக் கோரி வனத்துறைக்கு கோரிக்கை மனு அனுப்பினால் தோட்டக்கலைத்துறைக்கு செல்லுங்கள் என்று கூறி விவசாயிகளை அலைக்கழித்து வருகின்றனர். மாவட்டத்தில் விவசாய நிலப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயர் அழுத்த மின் கம்பிகள் எல்லாம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கம்பிகள் தரமிழந்து, நிலத்தின் வழியாக தாழ்வாக செல்கிறது. பலமான காற்று அடிக்கும் போது, மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி ஏற்பட்டு சவுக்கு பயிர்கள் எரிந்து சேதமடைவதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
வழக்கமாக ஆடு, மாடு, கோழி போன்றவை இயற்கை பேரிடர்களால் இறக்கும் போது, அரசு சார்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படுகிறது. ஆனால் சவுக்கு எரிந்து சேதமான விவசாயிகளுக்கு இதுவரை எந்த துறையும் நஷ்ட ஈடு வழங்காமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாநில சவுக்கு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சந்திரபிரபு கூறுகையில், 'பாதிக்கப்பட்ட சவுக்கு விவசாயிகள் சார்பில் இழப்பீடு வழங்குமாறு வனத்துறை, மாவட்ட கலெக்டர் என பல அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை.
அடுத்த கட்டமாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சென்னை தலைமைச் செயலகம் முன் போராட்டம் நடத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்போகிறோம்' என்றார்.
தமிழகத்திலுள்ள மற்ற மாவட்டங்களை விட, விழுப்புரம் மாவட்டத்தில் அதிக அளவில் சவுக்கு பயிரிடப்பட்டு வருவதால், பாதிக்கப்பட்டுள்ள சவுக்கு விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவது தொடர்பாக கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
