/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அனைத்து பிரச்னைகளுக்கும் அதிகாரிகள்தான் காரணம் திண்டிவனம் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்
/
அனைத்து பிரச்னைகளுக்கும் அதிகாரிகள்தான் காரணம் திண்டிவனம் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்
அனைத்து பிரச்னைகளுக்கும் அதிகாரிகள்தான் காரணம் திண்டிவனம் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்
அனைத்து பிரச்னைகளுக்கும் அதிகாரிகள்தான் காரணம் திண்டிவனம் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்
ADDED : அக் 16, 2025 11:26 PM

திண்டிவனம்: திண்டிவனம் நகரமன்ற கூட்டத்தில், அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து பா.ம.க., கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
திண்டிவனம் நகரமன்ற அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, நகர மன்ற தலைவர் நிர்மலா தலைமை தாங்கினார். கமிஷனர் சரவணன், துணைத் தலைவர் ராஜலட்சுமி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் குறைகள் மற்றும் புகார் தெரிவித்து பேசியதாவது:
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் சுகாதார அலுவலர்கள் முழுமையாக ஈடுபடுவது இல்லை. ஆங்காங்கே தண்ணீர் தேங்கி அகற்றப்படாமல் உள்ளது. இதை முழுமையாக ஆய்வு செய்து, டெங்கு தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
நகராட்சியில் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. நாங்கள் கேட்டு, கேட்டு ஓய்ந்து விட்டோம். அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் அதிகாரிகள்தான்.
மூன்றரை ஆண்டுகளாக நகரமன்ற கூட்டத்தில் பேசும் மைக்கை சரி செய்ய முடியவில்லை. அப்புறம் எப்படி திண்டிவனத்தை மாற்ற முடியும்.
சுகாதாரத்தில் பின்தங்கியுள்ளது. கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுகின்றனர். அபராதம் விதிப்பதும் இல்லை. சுகாதார அலுவலர் ஊழியர்களிடம் மரியாதை குறைவாக பேசுகின்றார். அவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகரில் மாடு, நாய் மற்றும் பன்றி தொல்லை அதிகரித்திருப்பதை கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து அதிகாரிகளையும் மாற்ற கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு காண்ட்ராக்டர் சாலை மற்றும் பைப் லைன் பணியை எடுக்கிறார். முதலில் சாலை அமைத்துவிட்டு, பின், பைப் லைனுக்காக சாலையை பள்ளம் தோண்டுகிறார். இதனால், அரசு நிதி வீணாகிறது.
பழுதான மின் விளக்குகளை சரிசெய்வதில்லை. 12 மின் விளக்கு பழுதானால், 5 மின் விளக்குகள் தான் கொடுக்கின்றனர். நகரில் உள்ள ஏரி கால்வாய்களை துார்வார வேண்டும். ரோஷணை ஏரியை துார்வாரக்கோரி 2 ஆண்டுகளாக மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கொசு மருந்து அடிப்பதில்லை.
இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினார்.
கவுன்சிலர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக நகரமன்ற தலைவர் மற்றும் கமிஷனர் கூறினர்.