ADDED : ஆக 08, 2026 04:31 AM
செயின் திருடியவர் கைது
மரக்காணத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 72; இவர், கடந்த மாதம் 8ம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது உறவினர் போல், பத்திரிகை வைப்பதாக கூறி வீட்டிற்குள் வந்தவர் பீரோவில் இருந்த 3 சவரன் செயினை திருடிச் சென்றுள்ளார். மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து நேற்று முன்தினம் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டைச் சேர்ந்த விக்னேஷ் கண்ணன், 48; என்பவரை போலீசார் கைது செய்து செயினை பறிமுதல் செய்தனர்.
மான் மீது பைக் மோதி ஒருவர் பலி
வானுார் அடுத்த ஆப்பிரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கபிலதாசன், 53; திண்டிவனம் கோர்ட்டில் வழக்கறிஞராக உள்ளார். புதுச்சேரியில் வசித்து வரும் இவர், நேற்று காலை பைக்கில் புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கிச் சென்றார். கிளியனுார் புறவழிச் சாலையில் சென்றபோது, குறுக்கே வந்த மான் மீது பைக் மோதியதில் படுகாயம் அடைந்தார். மானுக்கு கால் முறிவு ஏற்பட்டது. படுகாயமடைந்த கபிலதாசன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் மாலை இறந்தார். கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வேன் மோதி வாலிபர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் லோகேஷ், 19; இவர், சென்னையில் தங்கி பேக்கரியில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் ஊருக்கு வந்திருந்த லோகேஷ், ஸ்பிளண்டர் பைக்கில் சென்னைக்கு புறப்பட்டார். திருவாமாத்துார் சாலை சந்திப்பு அருகே வந்தபோது, பின்னால் வந்த மினி சரக்கு வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே லோகேஷ் இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வங்கி கணக்கில் முறைகேடு: ஒருவர் கைது
கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராசு மகன் சங்கர், 38; இவர், விழுப்புரத்தில் உள்ள ஒரு தேசிய வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கியுள்ளார். கடந்த நவம்பர் மாதம், அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கி கொடுத்துள்ளார். அந்த வங்கி கணக்குகளை, முறைகேடாக ஒரு ஏஜன்ட்டிடம் வழங்கி, அவர் கமிஷன் பெற்றுள்ளார். இது குறித்து, விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் அளித்த புகாரின் பேரில், சங்கர் மீது தகவல் தொழில்நுட்ப மோசடி பிரிவில் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.
மனைவி மாயம்: கணவர் புகார்
விக்கிரவாண்டி அடுத்த வீடூரைச் சேர்ந்தவர் அருண்குமார், 26; இவரது மனைவி தெல்பின் மேரி, 24; கடந்த ஓராண்டுக்கு முன் திருமணமானது. இவர் கடந்த 5ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அருண்குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
பைக்கிலிருந்து விழுந்த பெண் சாவு
விழுப்புரம் அடுத்த செம்மார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 55; இவரது மனைவி மஞ்சுளா, 54; இருவரும் கடந்த 5ம் தேதி ஸ்கூட்டரில், விழுப்புரம் சென்றனர். ஜானகிபுரம் ரயில்வே மேம்பாலம் அருகே வந்தபோது, திடீரென மஞ்சுளா மயங்கி கீழே விழுந்து காயமடைந்தார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு மஞ்சுளா நேற்று மாலை இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
போலி மருத்துவர் கைது
வானுார் அடுத்த உப்பு வேலுார் ஜெயின் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அசோக்குமார், 40; நர்சிங் படித்துள்ளார். அதே பகுதியில் கிளினிக் வைத்து, மருத்துவம் பார்த்து வந்தார். இதுகுறித்து ஆரம்ப சுகாதார நிலைய முதன்மை மருத்துவர் கமலா, கிளியனுார் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் அசோக்குமாரை கைது செய்தனர்.
