ADDED : ஜூன் 16, 2025 01:19 AM
தொழிலாளி தற்கொலை
பெண்ணைவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன், 34; கூலித் தொழிலாளி. இவர் சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில் மீண்டும் வலி அதிகமானதால் மனமுடைந்த வீரன் அரளி விதை சாப்பிட்டுள்ளார். உடல் நிலை பாதித்து நேற்று அதிகாலை 2:30 மணிக்கு திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கார் மோதி ஒருவர் பலி
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வீரப்பன், 60; நல்லதம்பி, 55; இருவரும் நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில் மொபட்டில் பேரங்கியூரிலிருந்து வளையாம்பட்டு செல்வதற்காக பேரங்கியூர் கூட்ரோடு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்தனர். மொபட்டை நல்லதம்பி ஓட்டினார். அப்போது திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வந்த கார் மொபட் மீது மோதியது. இதில், வீரப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார். நல்லதம்பி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திருவெண்ணெய்நல்லுார் விசாரித்து வருகின்றனர்.
பைக் விபத்தில் டாக்டர் பலி
வானுார் அடுத்த ராயபேட்டையைச் சேர்ந்தவர் ஜாபர் அலி மகன் சவுகத் அலி, 26; டாக்டர். இவர் கடந்த 8ம் தேதி கல்பாக்கத்தில் உள்ள அவரது கிளினிக்கிற்கு பைக்கில் இ.சி.ஆரில் சென்றார். மரக்காணம் அடுத்த கூனிமேடு பஸ் நிறுத்தம் அருகே எதிரே வந்த தனியார் பஸ் மோதியதில், படுகாயமடைந்தார். உடன், புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று இறந்தார். மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கஞ்சா வைத்திருந்தவர் கைது
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் விழுப்புரம் புதிய பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் 90 கிராம் கஞ்சா வைத்திருந்த பானாம்பட்டு இளந்திரையன், 29; சென்னை வியாசர்பாடி சுரேஷ், 28; ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து இளந்திரையனை கைது செய்தனர்.
எஸ்.ஐ.,யை வெட்ட முயன்ற 2 பேர் கைது
ரோஷணை சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் மற்றும் போலீசார், அப்பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு, சந்தேகப்படும் படி நின்றிருந்த அதே பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ், 35; அவரப்பாக்கம் விஜய், 22; ஆகியோ சோதனை செய்ததில் மது பாட்டில்கள் வைத்தருந்தது தெரியவந்தது. அப்போது, அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆனந்தராஜனை பணி செய்ய விடாமல் தடுத்து வெட்ட வந்தனர். உடன் போலீசார் அவர்களை தடுத்து இருவர் மீதும் வழக்குப் பதிந்து, கைது செய்து, 28 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மகன் மாயம்: தாய் புகார்
செஞ்சி சந்தைமேடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகணபதி மகன் தினேஷ், 18; பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ளார். இவர், மருத்துவ படிப்பில் சேருவதற்காக நீட் தேர்வு எழுதி இருந்தார். மேலும், வெளி நாடு சென்று படிப்பதற்காக பாஸ்போர்ட் எடுக்க 13ம் தேதி சென்னை சென்றார். அதன்பிறகு தினேஷை குடும்பத்தினர் தொடர்பு கொள்ள முடியவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது தாய் ஜெயமாலா அளித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
போதை கணவர் தற்கொலை
திண்டிவனம், காமராஜர் நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன், 39; கூலித் தெழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். இவரது மனைவி சுமதி. திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், மகள் உள்ளனர். ஜனார்த்தனன் சில தினங்களாக எந்த பணிக்கும் செல்லாமல் மது அருந்தி ஊர் சுற்றிகொண்டு வந்ததை சுமதி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜனார்த்தனன், நேற்று வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திண்டிவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.