/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முத்துமாரியம்மன் கோவில் இடித்து அகற்றம்; மக்கள் எதிர்ப்பால் போலீஸ் குவிப்பு விழுப்புரத்தில் பரபரப்பு
/
முத்துமாரியம்மன் கோவில் இடித்து அகற்றம்; மக்கள் எதிர்ப்பால் போலீஸ் குவிப்பு விழுப்புரத்தில் பரபரப்பு
முத்துமாரியம்மன் கோவில் இடித்து அகற்றம்; மக்கள் எதிர்ப்பால் போலீஸ் குவிப்பு விழுப்புரத்தில் பரபரப்பு
முத்துமாரியம்மன் கோவில் இடித்து அகற்றம்; மக்கள் எதிர்ப்பால் போலீஸ் குவிப்பு விழுப்புரத்தில் பரபரப்பு
ADDED : ஏப் 12, 2025 05:56 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் சாலை ஆக்கிரமிப்பிலிருந்த பழமையான முத்துமாரியம்மன் கோவில், பொது மக்கள் எதிர்ப்பை மீறி அதிரடியாக இடித்து அகற்றப்பட்டது.
விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு, பவர் அவுஸ் சாலையில், முத்துமாரியம்மன் கோவிலும், சாலையோரம் 45 வீடுகளும் உள்ளன. நகராட்சிக்கு சொந்தமான 20 அடி சாலையின் மையத்தில் கோவிலும், ரயில்வே மற்றும் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வீடுகள் ஆக்கிரமித்து இருந்தன. 75 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் வீடு கட்டி, கோவிலில் வழிப்பட்டு வருகின்றனர். பவர் அவுஸ் சாலையின் கடைசி பகுதியில், தனியார் வனஸ்பதி ஆலை இயங்கி வந்தது.
சாலை ஆக்கிரமிப்பு வீடு, கோவில்களை அகற்ற தனியார் வனஸ்பதி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்தாண்டு ஜனவரி மாதம், கோவில் மற்றும் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற உத்தரவிட்டது. ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கியும், நடவடிக்கை எடுக்காததால், தனியார் நிறுவனத்தினர் மீண்டும் நீதிமன்றத்தை நாடினர். இதனால், மாவட்ட நிர்வாகத்திற்கு கண்டனத்தை பதிவு செய்த நீதிமன்றம், 2 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்றி, அறிக்கை சமர்பிக்குமாறு கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.
கடந்த மார்ச் 30ம் தேதி, வருவாய் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர், ஜே.சி.பி., உதவியுடன் கோவில் மற்றும் வீடுகளை அகற்றச் சென்றனர். அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அவகாசம் கோரினர். பேச்சுவார்த்தை நடத்திய ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவால் இடித்து அகற்ற வந்துள்ளோம். ஒரு வார கால அவகாசம் அளிக்கிறோம் என கூறிவிட்டுச் சென்றனர். இதனிடையே, மாவட்ட நிர்வாகம் சார்பில், சாலை ஆக்கிரமிப்பில் குடியிருந்து வந்த 44 குடும்பத்தினருக்கு, விழுப்புரம் திருப்பாச்சனூர் பகுதியில், இலவச வீட்டுமனை ஏற்பாடு செய்தனர். கடந்த 31ம் தேதி, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், 44 குடும்பத்தினருக்கும் இலவச மனை பட்டாவை அமைச்சர் பொன்முடி வழங்கினார். அதனை மக்கள் வாங்க மறுத்ததால், வீடுகளை அகற்றுவதற்கு மட்டும் சில மாதங்கள் அவகாசம் வழங்கப்படும் என, அமைச்சர் பொன்முடி உறுதியளித்தார்.
கோவில் இடித்து அகற்றம்
இந்நிலையில், கோர்ட் உத்தரவின்படி பவர் அவுஸ் சாலை ஆக்கிரமிப்பிலிருந்த முத்துமாரியம்மன் கோவில் இடிக்கும் பணி நேற்று நடந்தது. காலை 6.30 மணிக்கு விழுப்புரம் ஆர்.டி.ஓ., முருகேசன், தாசில்தார் கனிமொழி, நகராட்சி ஆணையர் வசந்தி தலைமையில், வருவாய், நகராட்சி ஊழியர்கள், ஜே.சி.பி., இயந்திரங்களுடன் கோவிலை இடிக்கும் பணியை தொடங்கினர். ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார்குப்தா, ஏ.டி.எஸ்.பி., தினகரன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
கோவில் சுற்றுசுவரை உடைத்து கிரில் கதவுகளை அகற்றினர். நகராட்சி குழுவினர், கோவிலின் உள்ளே இருந்த உலோக சிலைகள், வழிபாட்டு பொருள்களை எடுத்துச் சென்றனர். காலை 6.30 மணிக்கு தொடங்கி, மதியம் 1.00 மணிக்கு கோவில் மண்டபம், உயரமான கோபுரம் என முழு கோவிலையும் இடித்து அகற்றினர்.
கோவில் சிலைகள், வழிபாட்டு பொருள்களை பறிமுதல் செய்த நகராட்சி நிர்வாகத்தினர், அதனை விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்புடன் வைத்தனர்.
பொது மக்கள் எதிர்ப்பு: போலீஸ் குவிப்பு
கோவில் இடிக்க தொடங்கியதும் அங்கு திரண்ட 100க்கும் மேற்பட்ட மக்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் பேரிகார்ட் போட்டு தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 75 ஆண்டுகளாக கோவிலை கட்டி வழிபட்டு வருகிறோம், எவ்வித இடையூறும் இல்லாமல் வசிக்கிறோம். தி.மு.க., ஆட்சி வந்ததும் இடித்து அகற்றுகின்றனர். அமைச்சர் பொன்முடியிடம் முறையிட்டும் நடவடிக்கையில்லை. விழுப்புரத்தில் மெயின் ரோட்டில் உள்ள கோவிலை விட்டுள்ளனர். ஆனால், ஓரமாக சிறிய சாலையில் உள்ள கோவிலை இடிக்கின்றனர். இனிமேல் தி.மு.க., வினர் ஓட்டு கேட்டு வரமுடியாது என்று கோஷமிட்டனர். கோர்ட் உத்தரவு என்பதால், யாரும், எதுவும் செய்ய முடியாது என, அங்கிருந்த அதிகாரிகள் பொதுமக்களை சமாதானம் செய்தனர்.

