ADDED : செப் 28, 2025 03:44 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான நெடுந்துார ஓட்ட போட்டி நடந்தது.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த போட்டியை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்போட்டி, ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபிரிவுகளாக நடந்தது. போட்டியில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆண்களுக்கான நெடுந்தூர ஓட்டம், பெருந்திட்ட வளாகத்தில் தொடங்கி, எல்லிஸ் சத்திரம் ரோடு, புதிய பஸ் நிலையம், நான்குமுனை சந்திப்பு, மாம்பழப்பட்டு சாலை வழியாக மீண்டும் பெருந்திட்ட வளாகம் வரையிலும் நடந்தது. பெண்களுக்கான ஓட்டம், பெருந்திட்ட வளாகத்தில் தொடங்கி எல்லிஸ் சத்திரம் ரோடு, புதிய பஸ் நிலையம் வழியாக மீண்டும் பெருந்திட்ட வளாகத்தில் முடிந்தது.
இப்போட்டியில், முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு, தலா 5000, 3,000, 2,000 ரூபாய் எனவும், 4 முதல் 10 இடங்கள் பிடித்தோருக்கு தலா 1000 ரூபாய் வீதம் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், பயிற்சியாளர்கள் ஜனார்தனன், மணிவண்ணன், எட்வீன், கலையரசி, சீத்தாராமன், அன்புராஜ், சிவபிரசாத் பங்கேற்றனர்.