/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உதவித் தொகையை எதிர்பார்த்து முதியோர்கள்... தவிப்பு: 2 ஆண்டுகளாக காத்திருந்து அவதிப்படும் பரிதாபம்
/
உதவித் தொகையை எதிர்பார்த்து முதியோர்கள்... தவிப்பு: 2 ஆண்டுகளாக காத்திருந்து அவதிப்படும் பரிதாபம்
உதவித் தொகையை எதிர்பார்த்து முதியோர்கள்... தவிப்பு: 2 ஆண்டுகளாக காத்திருந்து அவதிப்படும் பரிதாபம்
உதவித் தொகையை எதிர்பார்த்து முதியோர்கள்... தவிப்பு: 2 ஆண்டுகளாக காத்திருந்து அவதிப்படும் பரிதாபம்
ADDED : ஜன 07, 2026 05:54 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், முதியோர் உதவித் தொகையை எதிர்பார்த்து, கடந்த 2 ஆண்டுகளாக முதியோர், ஆதரவற்றோர் பலர் தவித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், முதியோர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 60 வயதைக் கடந்த முதியோர்கள், ஆதரவற்றவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் என இயலாதவர்களுக்காக தமிழக அரசு சார்பில், சமூக நலத்துறை மூலம் முதியோர் உதவித் தொகை என மாதம் தோறும் 1,200 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு தாலுகாவிலும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேருக்கு தற்போது முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உதவித் தொகைக்கு, வருவாய்த் துறை மூலம் ஆண்டு தோறும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, உதவி தொகை, பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த உதவித் தொகைக்காக பல ஆண்டுகளாக, புதிதாக விண்ணப்பித்து வரும் முதியோர்கள், ஆதரவற்றவர்கள் பலர் திட்டத்தில் சேர்க்கப்படாததால் நீண்டகாலமாக ஏமாற்றமடைந்து வருகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு சிறுவிவசாயிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கடவம்பாக்கம் மணி உள்ளிட்டோர் கூறுகையில், 'விழுப்புரம் மாவட்டத்தில், அனைத்து கிராமங்கள், நகரங்களில் உள்ள முதியோர்கள், விதவை, முதிர்கன்னிகள், மாற்றுத்திறனாளிகள் என பலதரப்பட்ட ஏழை மக்கள், அந்தந்த தாலுகாவில் முதியோர் மாதாந்திர உதவித்தொகை பெற சமுக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாருக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களது மனுக்கள் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டு அதில் தகுதியான நபர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கவும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தாலுகாவிலும் 1,500 பேர் முதல் 2000 பேர் வரை என மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு, முதியோர் உதவித்தொகை வழங்க கடந்த ஆண்டுகளில் ஆணை வழங்கப்பட்டது. ஆணை வழங்கி 2 ஆண்டுகளாகியும், அவர்களுக்கு முதியோர் உதவித் தொகை வழங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழக முதல்வரின் தனி பிரிவுக்கும், அமைச்சர்களுக்கும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்தும், விவசாயிகள் குறைகேட்பு கூட்டங்களிலும் நேரடியாக பேசியும் நடவடிக்கை எடுக்கவில்லை' என்றனர்.
இது குறித்து, சமுக பாதுகாப்பு திட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, முதியோர் உதவித்தொகை பெறுவதற்கு வழக்கம் போல் பயனாளிகள் தேர்வு செய்து, அரசுக்கு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டு, படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.
இதே போல், அனைத்து மாவட்டங்களிலும் பட்டியல் அனுப்பி, கடந்தாண்டு முதல் காத்திருப்பில் உள்ளது. நிதி நெருக்கடி காரணமாக, புதிய ஆணைகள் வழங்காமல் உள்ளதாக தெரிகிறது, இதற்கு அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

