/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீடூர் அணை நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றம்
/
வீடூர் அணை நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றம்
ADDED : அக் 23, 2025 06:47 AM

விக்கிரவாண்டி: கனமழை காரணமாக, வீடூர் அணை நிரம்பியதால் பாதுகாப்பு நடவடிக்கையாக அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ளது வீடூர் அணை. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் செண்டூர் பகுதியில் உள்ள தொண்டி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் வீடூர் அணைக்கு நேற்று மதியம் 12:00 மணியளவில் 4,352 கன அடி நீர்வரத்து இருந்ததால், அணையின் மொத்த கொள்ளளவான 32 அடியில் (605 மில்லியன் கன அடி) 31.100 அடி (534.528 மில்லியன் கன அடி) தண்ணீர் நிரம்பியது. இதையடுத்து கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவில், பாதுகாப்பு நடவடிக்கையாக அணையிலிருந்து 657 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
மதியம் 1:00 மணியளவில் அணைக்கு நீர் வரத்து 3808 கனஅடியாக அதிகரித்ததால், அணையில் இருந்து கூடுதலாக 2071 கன அடி உபரி நீரை வெளியேற்றினர். மாலை 6:00 மணி நிலவரப்படி நீர் வரத்து 5,440 கன அடியாக அதிகரித்ததால், உபரி நீர் 5,779 கன அடி வெளியேற்றப்பட்டது.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு கரையோர கிராம மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அருணகிரி, உதவி செயற் பொறியாளர் அய்யப்பன், உதவி பொறியாளர் பாபு ஆகியோர் நீர் வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
விக்கிரவாண்டி டி.எஸ்.பி., சரவணன், இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார், அணையில் பொதுமக்கள் இறங்காதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.