/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நீர்நிலைகள் நிரம்பாததால் விவசாயிகள்... கவலை: பயிர்களை அறுவடை செய்வதில் சிக்கல்
/
நீர்நிலைகள் நிரம்பாததால் விவசாயிகள்... கவலை: பயிர்களை அறுவடை செய்வதில் சிக்கல்
நீர்நிலைகள் நிரம்பாததால் விவசாயிகள்... கவலை: பயிர்களை அறுவடை செய்வதில் சிக்கல்
நீர்நிலைகள் நிரம்பாததால் விவசாயிகள்... கவலை: பயிர்களை அறுவடை செய்வதில் சிக்கல்
ADDED : ஜன 03, 2026 06:26 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 111.45 மி.மீ., குறைவாக பெய்த நிலையில், 50 சதவீத ஏரிகள் கூட நிரம்பாததால் சாகுபடி செய்த பயிர்களை அறுவடை செய்ய முடியுமா என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளது. மாவட்டத்தின் வழியே ஓடும் தென்பெண்ணை ஆறு, சங்கராபரணி ஆறு மற்றும் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 505 ஏரிகள், பாசனத்திற்கு ஆதாரமாக உள்ளது.
மேற்கு மாவட்டங்களான திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெய்யும் மழை நீர் தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்து வந்து, உபரி நீர் ஏரிகளில் நிரம்பும். மாவட்டத்தின் இயல்பான மழையளவு 1060.30 மி.மீ., ஆகும். இதில், தென்மேற்கு பருவமழை 356.66 மி.மீ., மற்றும் வடகிழக்கு பருவமழை 638.11 மி.மீ., என ஆண்டின் சராசரி மழை அளவாக உள்ளது.
கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழையால், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியது. மாவட்டத்தின் இயல்பான மழையளவான 1060.30 மில்லி மீட்டரில், கடந்த டிசம்பர் மாதம் வரை 526.66 மீ.மீ., மழை பெய்துள்ளது. இது மாவட்டத்தின் சராசரி மழை அளவில் 111.45 மி.மீ., குறைவாக பெய்துள்ளது.
இந்த மழையானது செஞ்சி, வளத்தி, மேல்மலையனுார் ஆகிய பகுதிகளில் அதிகளவில் பெய்தது. ஆனால், காணை, முகையூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல ஒன்றியங்களில் குறைவான மழை பெய்தது.
மேலும், மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 182 ஏரிகள் நுாறு சதவீதமும், 128 ஏரிகள் 76 முதல் 99 சதவீதத்திற்குள்ளும், 64 ஏரிகள் 51 முதல் 75 சதவீதத்திற்குள்ளும், 106 ஏரிகள் 26 முதல் 50 சதவீதத்திற்குள்ளும், 25 ஏரிகள் ஒன்று முதல் 25 சதவீதத்திற்குள்ளும் நிரம்பியுள்ளது.
பருவமழை குறைவால் மாவட்டத்தில் 50 சதவீத ஏரிகள் கூட முழுமையாக நிரம்பவில்லை. இதேபோன்று, மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் 600க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளது. இந்த ஏரிகளும் முழுமையாக நிரம்பவில்லை.
பருவமழையை நம்பி மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 68 ஆயிரத்து 95 எக்டர் நெல், 16 ஆயிரத்து 345 எக்டர் உளுந்து, 7432 எக்டர் வேர்க்கடலை, 12 ஆயிரத்து 29 எக்டர் கரும்பு மற்றும் காராமணி சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் தற்போது கவலையடைந்துள்ளனர்.
மழை குறைவால், கிணறு உள்ளிட்ட பாசன நீர்நிலைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால், கோடை துவங்கும் முன்னரே, கிணறு உள்ளிட்ட பாசன நீர்நிலைகளில் நீர் ஊற்றின் அளவு குறைந்துவிட்டது.
குறிப்பாக மழையை நம்பி சாகுபடி செய்த உளுந்து, வேர்க்கடலை காராமணி பயிர்கள் தற்போது நீரின்றி வாடி வருகிறது. இதனால், சாகுபடி செய்த பயிர்களை அறுவடை செய்ய முடியுமான விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

