/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிராமிய மாணவர்களின் கல்வி கேந்திரமாக கண்டமானடி அரசு மேல்நிலைப்பள்ளி
/
கிராமிய மாணவர்களின் கல்வி கேந்திரமாக கண்டமானடி அரசு மேல்நிலைப்பள்ளி
கிராமிய மாணவர்களின் கல்வி கேந்திரமாக கண்டமானடி அரசு மேல்நிலைப்பள்ளி
கிராமிய மாணவர்களின் கல்வி கேந்திரமாக கண்டமானடி அரசு மேல்நிலைப்பள்ளி
ADDED : ஆக 30, 2025 11:40 PM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள கண்டமானடி அரசு மேல்நிலைப்பள்ளி, 63 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் சாதனையாளர்களை உருவாக்கி வருகிறது.
கோலியனுார் வட்டாரத்தில் பழமை வாய்ந்த இப்பள்ளி, கடந்த 1962ம் ஆண்டில், கண்டமானடி கிராமத்தில் ஒரு கூரை கொட்டகையில் 50 மாணவர்களுடன் துவங்கப்பட்டது.
மறைந்த சுதந்திர போராட்ட தியாகியும், ஊராட்சி தலைவருமான கோவிந்தசாமியின் பெரும் முயற்சியில் இப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.
அதன் பிறகு கடந்த,1965ம் ஆண்டு நடுநிலை பள்ளியாகவும், தொடர்ந்து கடந்த, 1968ம் ஆண்டு உயர்நிலை பள்ளியாகவும் தரம் உயர்ந்தது.
அப்போதைய தலைமை ஆசிரியர்கள் ரங்கராஜன், கிருஷ்ணமூர்த்தி, ராமமூர்த்தி உள்ளிட்ட பலரின் வழிகாட்டுதலில் சிறப்பாக இயங்கி வந்தது.
இதையடுத்து தியாகி கோவிந்தசாமியின் தீவிர முயற்சியில் தரம் உயர்த்தப்பட்டு, பள்ளிக்கான புதிய கட்டடங்களும் கொண்டுவரப்பட்டது.
தமிழக மல்லர் கம்ப கழக நிறுவனரான உலகதுரை, உடற்கல்வி ஆசிரியராக இருந்தபோது, கண்டமானடி அரசு பள்ளியில், கடந்த, 1970ல் மாவட்ட அளவிலான போட்டிகள் சிறப்பாக நடந்து, பல்வேறு சாதனைகளை மாணவர்கள் படைத்தனர்.
குறிப்பாக கைப்பந்து, கபடி போட்டியில் மாவட்ட அளவில் இப்பள்ளி மாணவர்கள் சாதித்தனர். கலெக்டர் கரியாலி மூலம் இப்பள்ளிக்கு கூடுதல் கட்டடங்கள் கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து கடந்த 2002ம் ஆண்டு இப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த, 2006ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளிக்கான புதிய இரண்டு அடுக்கு பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டது. கிராம பஞ்சாயத்து சார்பில் புதிய இடம் வாங்கி புதிய கட்டடத்தை கொண்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக அரசு மேல்நிலைப்பள்ளி சாதனையாளர்களை உருவாக்கி வருகிறது.
ஒரு தலைமை ஆசிரியர், 6 முதுகலை ஆசிரியர்கள் என 25 ஆசிரியர்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் படித்த ஏராளமான மாணவர்கள் பொதுப்பணித்துறை, வேளாண் துறை பொறியாளர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், தலைமை செயலக அலுவலர்கள், ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள் என, உயர்ந்து பெருமை சேர்த்துள்ளனர்.
இதே பள்ளியில் படித்த மாணவர்கள், இப்பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர்.கோலியனுார் வட்டாரத்தில் கண்டமானடி, கொளத்துார், அத்தியூர் திருவாதி, பிடாகம், கண்டம்பாக்கம், மரகதபுரம், ஜானகிபுரம், சாலாமேடு, மேலமேடு, திருப்பாச்சனுார், ரெட்டிப்பாளையம், தளவானுார், வேலியம்பாக்கம், திருப்பாச்சாவடிமேடு உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிராம மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
முற்றிலும் கிராமங்களை மையமாக கொண்ட, கிராமப்புற அரசு மேல்நிலைப் பள்ளி என்ற பெயரில் இந்த பள்ளி சிறந்த கல்வியை வழங்கி வருகிறது.
பல்வேறு மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள், கலைக்கழகப் போட்டிகள், கல்வித் திருவிழா போட்டிகளில் இப்மாணவ, மாணவிகள் சாதனை படைத்து வருகின்றனர்.
இப்பள்ளியில் தற்போது 500 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளி சாதித்துள்ளது.
மாணவ, மாணவிகள் பல்வேறு விளையாட்டில் சாதித்து அதன் மூலம் உயர்கல்வி வாய்ப்பையும் பெற்றுள்ளனர். குறிப்பாக மாணவர் திருவேங்கடம், கலைத் திருவிழா போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதித்தார்.
அதன் மூலம் சினிமா துறைக்கான உயர்கல்வி படித்து வருகிறார். மாணவர் அகிலன் கலைத்திறமைக்காக காமராஜர் விருது பெற்று சாதித்துள்ளார். இப்படி பல்வேறு விருதுகளையும், சாதனைகளையும் பள்ளி மாணவர்கள் படைத்து வருகின்றனர்.

