/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்டமங்கலம் பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
/
கண்டமங்கலம் பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
ADDED : மே 31, 2025 12:53 AM

கண்டமங்கலம் : கண்டமங்கலம் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு வனத்தாம்பாளையம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டமங்கலம் ஒன்றியம், பெரியபாபுசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட வனத்தாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு மனைவி இந்திரா. ஊராட்சி பணித்தள பொறுப்பாளர். கடந்த 1 ஆண்டிற்கு முன்பு இறந்தார். இந்திராவின் கணவர் வடிவேலு பணிதள பொறுப்பாளராக பணியாற்றி வந்தார்.
அதே கிராமத்தைச் சேர்ந்த வி.சி.க., பிரமுகர் இனியவன், இந்திராவின் கணவர் பணித்தள பொறுப்பாளராக பணி செய்ய எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுக்கு புகார் மனு அப்பியதுடன், ரவிக்குமார் எம்.பி., பரிந்துரை பேரில் தனது உறவினர் ஆயிஷாவை பணித்தள பொறுப்பாளராக நியமிக்க பி.டி.ஓ.,விடம் கடிதம் கொடுத்தார்.
இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, நுாறு நாள் வேலையை புறக்கணித்தனர். இதனால் தனது சகோதரர் எட்டியான் மனைவி சரசு என்பவரை பணிதள பொறுப்பாளராக நியமிக்க முயற்சித்தார். அதற்கும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், தி.மு.க., ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ் மனைவி உஷா பணித்தள பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
உஷா மேற்பார்வையில் நுாறுநாள் வேலையில் குளம் துர்வாரும் பணி நடந்தது. இனியவன் நுாறு நாள் வேலை நடைபெறவில்லை என பி.டி.ஓ., விடம் புகார் அளித்தார். அதன்படி, வனத்தாம்பாளையம் நுாறுநாள் வேலையை நிறுத்த பி.டி.ஓ., உத்தரவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், தனி நபரின் பொய் புகார் மீது விசாரணை நடத்தாமல், பணியை நிறுத்தியதை கண்டித்து பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கண்டமங்கலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை ஏற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.