ADDED : செப் 17, 2025 12:09 AM
விழுப்புரம்; காணை அருகே, நில தகராறில் போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த சோழகனுாரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அருண்குமார், 26; விவசாயி. இவர், தனது நிலத்தில் கடந்த 14ம் தேதி தென்னங்கன்றை நட்டார்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த பக்கத்து நில உரிமையாளர் ஏழுமலை மகன் சிவக்குமார், 40; அவரது மனைவி ஜெயசித்ரா, 38; உறவினர்கள் பிரேமா, நவீன்குமார் ஆகியோர் சேர்ந்து, 'தென்னங்கன்றை ஏன் எங்கள் நிலத்தின் ஓரமாக நட்டாய்' என அருண்குமாரை தடுத்து திட்டி, மண்வெட்டியால் கடுமையாக தாக்கினர்.
அதனை தடுக்க வந்த அருண்குமாரின் தந்தை ராஜேந்திரனும் பலத்த காயமடைந்தார். இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்த புகாரின் பேரில், காணை போலீசார், 4 பேர் மீது வழக்குப்பதிந்து, சிவக்குமாரை கைது செய்தனர்.