/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதுச்சேரி-திண்டிவனம் பைபாசில் குப்பைகள் எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் பாதிப்பு
/
புதுச்சேரி-திண்டிவனம் பைபாசில் குப்பைகள் எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் பாதிப்பு
புதுச்சேரி-திண்டிவனம் பைபாசில் குப்பைகள் எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் பாதிப்பு
புதுச்சேரி-திண்டிவனம் பைபாசில் குப்பைகள் எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் பாதிப்பு
ADDED : ஜன 08, 2025 06:14 AM

வானுார் : புதுச்சேரி-திண்டிவனம் பைபாஸ் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை தீவைத்து எரிப்பதால் வாகன ஓட்டிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வருகிறது.
புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலை முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக பல்வேறு ஊர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
இது மட்டுமின்றி இந்த சாலையையொட்டி, பல்வேறு குடியிருப்புக்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் என உருவெடுத்துக் கொண்டுள்ளன.
இந்த சாலையில், அப்பகுதியை சேர்ந்த சிலர் கட்டுமான கழிவுகள், கோழிக்கழிவுகளை சகட்டு மேனிக்கு கொட்டி வருகின்றனர்.
இதனால் ஆங்காங்கே முகம் சுளிக்கும் வகையில், குப்பை கழிவுகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக மொரட்டாண்டி டோல் கேட்டில் இருந்து ராவுத்தன்குப்பம் வரை சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த பகுதியில் செல்லும் சில சமூக விரோதிகள், சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளுக்கு தீ வைத்து விடுகின்றனர்.
அப்பகுதியில் குவிந்து கிடக்கும் வீணான டயர், தர்மாகுளர் ஷீட், பிளாஸ்டிக் பொருட்களும் தீயில் கொழுந்து விட்டு எரிகிறது. இதன் காரணமாக கிளம்பும் கரும்புகையால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து பொது மக்கள் டோல்கேட் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தாலும், சாலையில் செல்பவர்கள் சிகரெட் துண்டுகளை வீசி விட்டு செல்வதால், தீப்பிடித்து எரிவதாக காரணத்தை மட்டுமே கூறுகின்றனர்.
தீயை அணைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எனவே சாலையில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

