ADDED : பிப் 28, 2024 11:09 PM
விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி பகுதியில், கமிஷனர் ரமேஷ், இரு சக்கர வாகனத்தில் சென்று ஆய்வு செய்தார்.
விழுப்புரம் நகராட்சி 9வது வார்டு, வடக்குதெரு முதல் சந்து பகுதியில் பாதாள சாக்கடை இணைப்பு குழாய் உடைந்தது. இதனால், சில தினங்களாக அந்த தெருவில் கழிவு நீர் வழிந்தோடியது. பாதாள சாக்கடை உடைப்பை சீரமைக்க வேண்டுமென வார்டு கவுன்சிலர் வழக்கறிஞர் ராதிகா, நகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.
இதேபோல், விழுப்புரம் நகராட்சி 18 வது வார்டு கிழக்கு சண்முகபுரம் காலனி பகுதியில், பழுதடைந்த சிறுபாலத்தை புதுப்பிக்க வேண்டுமென கவுன்சிலர் சசிரேகா பிரபு, நகராட்சியில் முறையிட்டார். இதையடுத்து, விழுப்புரம் நகராட்சி கமிஷனர் ரமேஷ், ஸ்கூட்டரில் சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார்.
வடக்குத் தெரு பகுதியில் பழுதடைந்த பாதாள சாக்கடை இணைப்புகளை உடனடியாக சீரமைக்குமாறு அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். வார்டு கவுன்சிலர் ராதிகா, நகராட்சி பொறியாளர் மாலதி ஆகியோர் உடனிருந்தனர்.

