மாவட்டத்தில் குற்றங்களைத் தடுக்க காவல்துறை… புது முயற்சி! 3 கிராமங்களுக்கு ஒரு போலீசை நியமிக்க திட்டம்
மாவட்டத்தில் குற்றங்களைத் தடுக்க காவல்துறை… புது முயற்சி! 3 கிராமங்களுக்கு ஒரு போலீசை நியமிக்க திட்டம்
UPDATED : ஜூன் 08, 2026 08:27 PM
ADDED : ஜூன் 08, 2026 08:13 PM
-நமது நிருபர்-
விழுப்புரம் மாவட்டத்தில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், பழைய குற்றவாளிகளைக் கண்காணிக்கவும் 3 கிராமங்களுக்கு ஒரு போலீசார் நியமிக்கும் பணியில் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம் ஆகிய 4 போலீஸ் சப் டிவிஷன்கள் உள்ளது. இதில், 31 சட்டம், ஒழுங்கு காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் சில தினங்களாக திருட்டு, கொலை உள்ளிட்ட சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் நடந்து வருகிறது. இந்த குற்றங்களைத் தடுக்க மாவட்ட காவல் துறை சார்பில் தமிழகத்தில் முதன்முறையாக புதிய முயற்சியை அமல்படுத்தும் பணியில் தீவிரம் காட்டியுள்ளனர்.
அதன்படி, மாவட்ட காவல் நிலைய எல்லைகளில் உள்ள 3 கிராமங்களுக்கு ஒரு போலீஸ்காரர் நியமிக்க காவல்துறை அதிகாரிகளுக்கு எஸ்.பி., சாய் பிரனீத் உத்தரவிட்டுள்ளார்.
இந்த போலீசார் தங்களுக்கு ஒதுக்கப்படும் கிராமங்களில் உள்ள பொதுமக்களுடன் இணக்கமாக இருக்க வேண்டும். அந்தந்த கிராமங்களில் உள்ள பழைய குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.
பழைய குற்றவாளிகள் செயல்பாடுகளில் ஏதேனும் மாற்றம் உள்ளதா எனவும், அவர்கள் புதியதாக வாகனங்கள் வாங்குகிறார்களா, திடீரென அவர்களுக்கு வசதி வாய்ப்பு வருகிறதா. அப்படி இருந்தால் அதற்கு எங்கிருந்து பணம் வந்தது உள்ளிட்டவைகள் குறித்து விசாரிக்க வேண்டும்.
அவ்வாறு போலீசார் விசாரிப்பதும், கண்காணிப்பதும் தெரிந்தால் பழைய குற்றவாளிகள், குற்றச்செயல்களில் ஈடுபடுவது குறையும் என காவல் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது தொடர்பான தகவல்களை காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு போலீசார் அனுப்ப வேண்டும். மேலும், அந்தந்த கிராமங்களில் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும் முன் தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும்.
அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனையை கண்காணித்து காவல் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தடுக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும்.
இதற்காக மாவட்ட காவல்துறை அதிகாரிகள் திட்டம் தயாரித்து வருகின்றனர். மாவட்டத்தில் இந்த புதிய முயற்சியால் குற்றங்கள் பெருமளவில் குறையும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
