/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஒழுங்கீன மாணவர்கள் விவகாரத்தில் மீது அதிகாரிகள்... அதிரடி; 'சஸ்பெண்ட்' மற்றும் டி.சி., வழங்கி நடவடிக்கை
/
ஒழுங்கீன மாணவர்கள் விவகாரத்தில் மீது அதிகாரிகள்... அதிரடி; 'சஸ்பெண்ட்' மற்றும் டி.சி., வழங்கி நடவடிக்கை
ஒழுங்கீன மாணவர்கள் விவகாரத்தில் மீது அதிகாரிகள்... அதிரடி; 'சஸ்பெண்ட்' மற்றும் டி.சி., வழங்கி நடவடிக்கை
ஒழுங்கீன மாணவர்கள் விவகாரத்தில் மீது அதிகாரிகள்... அதிரடி; 'சஸ்பெண்ட்' மற்றும் டி.சி., வழங்கி நடவடிக்கை
ADDED : ஆக 02, 2025 06:49 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளிகளில், ஒழுங்கீன மாணவர்களை 'சஸ்பெண்ட்' செய்தும், மாற்றுச்சான்றிதழ் வழங்கியும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, கடந்த ஜூன் 2ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, வழக்கம் போல, செயல்பட்டு வருகின்றன.
விழுப்புரம் மாவட்டத்தை பொருத்தவரை, 1,295 அரசு பள்ளிகள்; 282 தனியார் பள்ளிகள்; 196 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள்; 23 பகுதிநேர நிதியுதவி பெறும் பள்ளிகள்; என மொத்தம் 1,796 பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இந்த பள்ளிகளில், 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சிலர் ஒழுங்கீனமான முறையில் வகுப்பறைக்கு வருகின்றனர்.
தங்களின் தலைமுடிகளை வித்தியாச, வித்தியாசமாக வைத்துக்கொண்டும், சீருடை சட்டைகளை இடுப்பு அளவிற்கும், 'பேன்ட்டு'களை டிசைனாகவும் தைத்து அணிந்து வருகின்றனர். இதை கண்டிக்கும், ஆசிரியர்களிடம் மரியாதைக்குறைவாக நடந்து கொள்கின்றனர்.
மாணவர்களின் இந்த அட்டகாசத்தால், அரசு பள்ளிகளின் கல்வித்தரம் கேள்விக்குறியாகி வருகின்றது. இதை தடுக்க ஒழுங்கீனமான மாணவர்கள் மீது அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என 'தினமலர்' நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், ஒழுங்கீன மாணவர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 வகுப்பில் மாணவர்கள், இரு கோஷ்டிகளாக ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களை கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தும், தொடர்ந்து அடாவடி செயலில் ஈடுபட்டனர்.
இதனால் முதற்கட்டமாக, 3 மாணவர்களை 'சஸ்பெண்ட்' செய்து, 6 மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுத்து, நடவடிக்கை மேற்கொண்டனர். தற்போது அந்த, 6 மாணவர்களும் தனித்தனியாக, 6 அரசு பள்ளிகளில் சேர்க்கை பெற்று படித்து வருகின்றனர்.
இது குறித்து சி.இ.ஓ., அறிவழகன் கூறியதாவது:
மாணவர்கள் பள்ளிகளில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில், 12 அரசு பள்ளிகளில், மாணவர்கள் அட்டகாசத்தில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பள்ளிகளில் கலெக்டர், எஸ்.பி., - டி.எஸ்.பி., ஆகியோர் மூலம் 'கவுன்சிலிங்' கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடைவேளை நேரங்களில் பள்ளிக்கு வெளியில் சுற்றும் மாணவர்களை போலீசார் ரோந்து சென்று எச்சரித்து பள்ளிக்குள் அனுப்ப, போலீஸ்துறைக்கு கடிதம் கொடுத்துள்ளோம்.
காலாண்டு தேர்வு முடிவதற்குள் மாணவர்கள் நல்வழிப்படுத்தப்படுவர். மாணவர்கள், மாணவர்களாக மாற வேண்டும்.
ஒழுங்கீன மாணவர்களுக்கு முதலில் எச்சரிக்கை கொடுக்கிறோம். அதில் மாறவில்லை என்றால் மற்ற மாணவர்களின் நலன் கருதி அடாவடி மாணவர்களை 'சஸ்பெண்ட்' செய்தும், மாற்றுச்சான்றிதழ் வழங்கி, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.