ADDED : ஜூன் 08, 2025 10:35 PM

செஞ்சி : வல்லத்தில் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம் சார்பில் வல்லம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில், விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் தலைமை தாங்கினார். வல்லம் ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் முகாமை துவக்கி வைத்தார்.
இதில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளை பயன்படுத்தாமல் பயிர் சாகுபடி செய்யும் முறை குறித்தும், மண்புழு உரம், பஞ்சகாவிய ஜீவாமிர்தம், மீன் அமிலம், ஐந்திணை கரைசல், அமிர்த கரைசல் ஆகியவற்றை தயாரித்து பயன்படுத்தும் விதம் குறித்து விளக்கி கூறினர்.
கால்நடை மருத்துவர் நிவேதா, வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் தணிகைவேல், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுபாஷ் சந்திரபோஸ், துணை வேளாண்மை அலுவலர் கோவிந்தராஜ் கலந்து கொண்டனர்.
பயிற்சி ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் மஞ்சு மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் பாலாஜி செய்திருந்தனர். வல்லம் உழவர் உற்பத்தியாளர் நிறுவன பயிற்சியாளர்கள் தியாகு, பாண்டியன் மற்றும் நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.