/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பல்லவர் கால மூத்ததேவி சிற்பம் கண்டுபிடிப்பு
/
பல்லவர் கால மூத்ததேவி சிற்பம் கண்டுபிடிப்பு
ADDED : நவ 18, 2024 06:24 AM

விழுப்புரம் : விழுப்புரம் அருகே கண்டமானடி கிராமத்தில், பல்லவர் கால மூத்ததேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் செங்குட்டுவன் மற்றும் சக்திவேல் உள்ளிட்ட குழுவினர், விழுப்புரம் அடுத்த கண்டமானடி, அரசு ஊழியர் நகரையொட்டியுள்ள பகுதியில், கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது கி.பி., 7ம் நுாற்றாண்டு பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூத்ததேவி சிற்பம் இருப்பதை கண்டெடுத்தனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
இந்த பகுதியில், ஒரு பலகைக் கல்லில், அழகிய தலை அலங்காரத்துடன் வடிக்கப்பட்டுள்ள இந்த சிற்பத்தில், மூத்ததேவி சரிந்த மார்பு, வயிற்றுடன் கால்களைத் தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் உள்ளது. காதுகள், கழுத்து, கைகளில் பழங்கால ஆபர ணங்கள் அணி செய்கின்றன.
மூத்த தேவியின் வலது கை, தாமரை மொட்டினை ஏந்தியுள்ளது. இடது கை செல்வக் குடத்தின் மீது வைத்த நிலையில் காணப்படுகிறது. சிற்பத்தில், மூத்த தேவியின் மகன் மாந்தன், மகள் மாந்தி ஆகியோர் நின்ற நிலையில் உள்ளனர். ஆனால், வழக்கமாக இடம்பெறும் காக்கைக் கொடி, இந்த சிற்பத்தில் இடம்பெறவில்லை.
ஜேஷ்டா என்று வடமொழியில் அழைக்கப்படும், மூத்ததேவி வழிபாடு மிகவும் தொன்மை வாய்ந்தது. விழுப்புரம் மாவட்டத்தில், பிடாகம், நன்னாடு, செல்லபிராட்டி உள்ளிட்ட இடங்களில், இதுபோன்ற மூத்ததேவியின் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அந்த வகையில், கண்டமானடி கிராமத்தில் தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த மூத்ததேவி சிற்பமும், வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தச் சிற்பத்தை, உரிய முறையில் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.