/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேர்தல் பணியை துவங்குவதில் அரசியல் கட்சியினர் குழப்பம்! எந்த தொகுதி யாருக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பு
/
தேர்தல் பணியை துவங்குவதில் அரசியல் கட்சியினர் குழப்பம்! எந்த தொகுதி யாருக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பு
தேர்தல் பணியை துவங்குவதில் அரசியல் கட்சியினர் குழப்பம்! எந்த தொகுதி யாருக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பு
தேர்தல் பணியை துவங்குவதில் அரசியல் கட்சியினர் குழப்பம்! எந்த தொகுதி யாருக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பு
UPDATED : மார் 18, 2026 07:26 AM
ADDED : மார் 18, 2026 04:29 AM

-நமது நிருபர்-
கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர்கள் முடிவாகாத நிலையால், விழுப்புரம் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் தேர்தல் பணியைத் துவங்க முடியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என கடந்த 15ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அன்று மாலையில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க, பொதுமக்கள் அரசியல் கட்சியினர், நன்னடத்தை விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என, விழுப்புரம் மாவட்ட தேர்தல் துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தேர்தல் பணிகளில் முழுவீச்சில் இறங்கி, மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை, விதிமுறை மீறலைத் தடுக்க பறக்கும் படைகள், கண்காணிப்புக் குழுக்கள், வீடியோ பதிவுக்குழு, செலவின கணக்கு குழு அமைக்கப்பட்டு மாவட்டம் முழுதும் தேர்தல் அதிகாரிகள் பம்பரமாக சுழன்று வருகின்றனர்.
ஆனால், வேட்பு மனு தாக்கல் வரும் 30ம் தேதி துவங்க உள்ள நிலையில், குறைந்த நாட்களில் தேர்தல் பணியை செய்ய முடியுமா என்ற தவிப்புக்கு அரசியல் பிரமுகர்கள் ஆளாகியுள்ளனர்.
அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இதுவரை முடிவாகவில்லை. தொகுதி பங்கீடு முடிந்த பிறகே ஒவ்வொரு கட்சியும் வேட்பாளரை அறிவிக்க முடியும்.
அதன்பிறகு, தொகுதி வாரியாக கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம், செயல்வீரர்கள் கூட்டம் நடத்த வேண்டும். இதற்கே நாட்கள் கடகடவென ஓடிவிடும். தேர்தலுக்கு இன்னும் 36 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட முடியாமல் அரசியல் கட்சியினர் உள்ளனர்.
மாவட்டத்தில், விழுப்புரம், திருக்கோவிலுார், விக்கிரவாண்டி, மயிலம், செஞ்சி, திண்டிவனம் (தனி), வானுார் (தனி) ஆகிய 7 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இதில், தற்போது 4 தொகுதிகள் தி.மு.க., - ஒரு தொகுதி பா.ம.க., - 2 தொகுதிகள் அ.தி.மு.க., வசம் உள்ளது. இந்த தொகுதிகளில் அ.தி.மு.க., - தி.மு.க., கட்சி நேரடியாக போட்டியிடுகின்றதா அல்லது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறதா என தெரியாமல் கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர்.
தேர்தல் அறிவித்து அதிகாரிகள் குழு பம்பரமாக சுழன்று வரும் நிலையில், அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளை துவங்கவில்லை.
இதனால், மாவட்டத்தில் தேர்தல் இன்னும் களைகட்டவில்லை. மேலும், தேர்தல் என்றாலே கிராமப் புறங்களில் வீடுகளின் சுவர் பிடிக்க அரசியல் கட்சியினர் போட்டி போடுவர். ஆனால், தற்போது தேர்தல் தேதி அறிவித்த பிறகும், வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி பற்றி தெரியாமல், சுவர் விளம்பரங்கள் பிடிப்பதில் அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.

