/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ.60 கோடியில் தலைமை அரசு மருத்துவமனை: இம்மாத இறுதியில் திறக்க ஏற்பாடுகள் தீவிரம்
/
ரூ.60 கோடியில் தலைமை அரசு மருத்துவமனை: இம்மாத இறுதியில் திறக்க ஏற்பாடுகள் தீவிரம்
ரூ.60 கோடியில் தலைமை அரசு மருத்துவமனை: இம்மாத இறுதியில் திறக்க ஏற்பாடுகள் தீவிரம்
ரூ.60 கோடியில் தலைமை அரசு மருத்துவமனை: இம்மாத இறுதியில் திறக்க ஏற்பாடுகள் தீவிரம்
ADDED : நவ 02, 2025 11:44 PM

திண்டிவனம்: திண்டிவனத்தில் 60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையை, இம்மாத இறுதியில் திறப்பு விழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
திண்டிவனம் அரசு மருத்துவமனை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக குறுகிய இடத்தில் போதிய மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வந்தது.
தமிழக அரசின் மருத்துவ மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கடந்த 2023ம் ஆண்டு, திண்டிவனம் மருத்துவமனை, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த உத்தரவிடப்பட்டது.
மருத்துவமனையின் கட்டமைப்பை உயர்த்தும் வகையில் 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, 2023ம் ஆண்டு ஜூலை மாதம், கட்டடங்கள் கட்டும் பணி துவங்கியது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான், பணிகள் அனைத்தும் மே 15ம் தேதிக்குள் முடிந்துவிடும் என ஒப்பந்ததரர் தரப்பில் தெரிவித்துள்ளதாக கூறியும், பணிகள் முடிவடையவில்லை.
இதற்கிடையே கடந்த 2 வாரங்களுக்கு முன் முதன்மைச் செயலர் சுன்சோங்கம் ஜடக், மருத்துவமனை கட்டுமானப் பணியை ஆய்வு செய்து, விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.
இதன் தொடர்ச்சியாக மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டட பணிகளை விரைவாக முடிக்கும் வகையில் நிலுவையிலுள்ள பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து வருகிறது.
பணிகள் முன்னேற்றம் மற்றம் திறப்பு விழா குறித்து, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர்கள் தரப்பில் கூறுகையில், 'மாவட்ட தலைமை மருத்துவமனையில் கட்டடத்தின் உள் பகுதியில் அனைத்து பணிகளும் முடிந்து விட்டது. வெளிபுறப்புறத்தில் வாகனங்கள் வரும் வழியில் சாலை பணி நடைபெற்று வருகிறது.
இதே போல் மருத்துவமனையில் நுழைவு வாயில் பகுதியில் ஆர்ச் அமைக்கும் பணி மட்டும் உள்ளது. மீதமுள்ள அனைத்து பணிகளும் 10 நாட்களுக்குள் முடிந்துவிடும். இதன் பிறகு ஒப்பந்ததாரர் கட்டத்தை பொதுப்பணித்துறையிடம் முறைப்படி ஒப்படைத்து விடுவர்.
அதன்பிறகு கட்டடம் திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது குறித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்து விடுவோம்.
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு புதிய கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற உள்ளது. இதனால் முதல்வர் மூலம் இந்த மாத இறுதிக்குள் மாவட்ட தலைமை மருத்துவமனை திறப்பு விழா நடைபெறும்' என்றனர்.

