/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்ட மார்க்கெட் கமிட்டிகளில் கொள்முதல்... துவங்கியது அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் தற்காலிக தீர்வு
/
மாவட்ட மார்க்கெட் கமிட்டிகளில் கொள்முதல்... துவங்கியது அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் தற்காலிக தீர்வு
மாவட்ட மார்க்கெட் கமிட்டிகளில் கொள்முதல்... துவங்கியது அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் தற்காலிக தீர்வு
மாவட்ட மார்க்கெட் கமிட்டிகளில் கொள்முதல்... துவங்கியது அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் தற்காலிக தீர்வு
ADDED : பிப் 28, 2026 06:47 AM

விழுப்புரம்: விழுப்புரம் மார்க்கெட் கமிட்டியில், வியாபாரிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு மார்க்கெட் கமிட்டிகளில், விளைபொருட்கள் கொள்முதல் நேற்று துவங்கியது. தமிழகத்தில் உள்ள மார்க்கெட் கமிட்டிகளில் மின்னணு தேசிய வேளாண் சந்தை (இ -நாம் 1.0) திட்டத்தில், விவசாய விளைபொருட்களை, வியாபாரிகள் ஏலம் எடுத்து வருகின்றனர். கொள்முதல் செய்யும் பொருட்களுக்கான தொகையை மார்க்கெட் கமிட்டி மெய்நிகர் வங்கி கணக்கிற்கு, வியாபாரிகள் அனுப்புகின்றனர். அதன்பின், அந்த தொகையை, மார்க்கெட் கமிட்டி அலுவலர்கள், விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்புகின்றனர்.
இந்நிலையில், இத்திட்டத்தை அப்டேட் செய்து இ -நாம் 2.0 என, கடந்த 24 ம் தேதி முதல் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டது. இதன்படி, விவசாயிகள் மார்க்கெட் கமிட்டிகளுக்கு விளை பொருட்களை கொண்டு வருவதற்கு முன், வங்கி கணக்கு புத்தகம், மொபைல் நம்பர் மற்றும் ஆதார் அட்டை நகலை பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்ததற்கான ஓ.டி.பி., எண்ணை கொண்டு வரும் விவசாயிகளின் பொருட்கள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. வியாபாரிகள் தங்களின் லைசென்ஸ் ஐ.டி.,யை அப்டேட் செய்து, ஓ.டி.பி., எண் பதிவு செய்து, பொருட்களை கொள்முதல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த 24ம் தேதி, புதிய நடைமுறைக்கு வியாபாரிகள் சங்கத்தினர், எதிர்ப்பு தெரிவித்து மாவட்டம் முழுவதும் ஏலத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள், விழுப்புரம், செஞ்சி பகுதிகளில் , சாலை மறியல் செய்தனர். அதிகாரிகள் சமாதானம் செய்ததின் பேரில் போராட்டம் கைவிட்டப்பட்டது., வியாபாரிகள் கொள்முதல் செய்வதை புறக்கணித்ததால், மார்க்கெட் கமிட்டிகளில் 10 ஆயிரம் மூட்டை விளைபொருட்கள் தேக்கமடைந்தது.
இப்பிரச்னை குறித்து, விழுப்புரம் மார்க்கெட் கமிட்டி அலுவலகத்தில், வேளாண்மை விற்பனைத்துறை அதிகாரிகள், நேற்று காலை பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை (மார்க்கெட் கமிட்டிகள்) இணை இயக்குநர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
மாநில துணை இயக்குநர் டொனால்டோ ரமணி, இ-நாம் மாநில ஒருங்கிணைப்பாளர் தினேஷ், திட்ட விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சுமதி, மார்க்கெட் கமிட்டி செயலாளர் வேலன், விழுப்புரம் மாவட்ட நெல், அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவர் குபேரன், துணை செயலாளர் அன்வர், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கலிவரதன் மற்றும் வியாபாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.
இதில், இ நாம் 2.0 திட்டத்தில் விளைபொருட்கள் விலை நிர்ணயம் செய்யவும், வியாபாரிகள் பதிவு புதுப்பிக்கவும் தாமதம் ஏற்படுகிறது. கடந்த 2 நாட்களாக கொள்முதல் செய்த விளைபொருட்களுக்கு, தற்காலிகமாக பழைய நடைமுறைப்படி விலை பட்டியல் அறிவிக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று கமிட்டிக்கு கொண்டு வரப்பட்ட விளைபொருட்கள், மாலை 4:30 மணிக்கு, விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மாலை 6:00 மணியளவில் விலை பட்டியல் முடிவு செய்யப்பட்டது. இதேபோல் மற்ற கமிட்டிகளிலும், விளைபொருட்களை கொள்முதல் செய்யப்பட்டது.

