/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொதுப்பணித்துறை திட்ட பணிகள் விழுப்புரம் கலெக்டர் அறிவுரை
/
பொதுப்பணித்துறை திட்ட பணிகள் விழுப்புரம் கலெக்டர் அறிவுரை
பொதுப்பணித்துறை திட்ட பணிகள் விழுப்புரம் கலெக்டர் அறிவுரை
பொதுப்பணித்துறை திட்ட பணிகள் விழுப்புரம் கலெக்டர் அறிவுரை
ADDED : ஆக 09, 2025 11:21 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பில் மாதந்திர ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில், நீர்வளத்துறை சார்பில் கொங்கம்பட்டு கிராமத்தில் மலட்டாறு குறுக்கே ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அணைக்கட்டு பணியின் நிலை; செஞ்சி அருகே மேல்களவாய் கிராமத்தில் வராக நதி குறுக்கே ரூ.8 கோடி மதிப்பில், கட்டப்பட்டு வரும் அணைக்கட்டு பணி முன்னேற்றம்; திண்டிவனம் அருகே பெரமந்துார் ஏரி, சிங்கனுார் பெரிய ஏரி, ஜக்காம்பேட்டை பெரிய ஏரி, சித்தேரி ஏரி ஆகிய ஏரிகளில் ரூ. 8 கோடி மதிப்பில் நடந்து வரும் புனரமைப்பு பணி; ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், விழுப்புரம் நரியாறு ஓடையில் ரூ.2 கோடி மதிப்பில் துார்வாரும் பணி; விக்கிரவாண்டி அருகே பனமலை ஏரி உள்ளிட்ட சுற்றியுள்ள 11 ஏரிகளில், ரூ. 6.25 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் புனரமைப்பு பணி; ஆகியவற்றின் நிலை குறித்து கலெக்டர் விரிவாக கேட்டறிந்தார்.
தொடர்ந்து, விக்கிரவாண்டி தாலுகா வழுதாவூர் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ.30 கோடியில் அணைக்கட்டு கட்டுதல்; வீடூர் அணை கதவுகள் ரூ.38.36 கோடி மதிப்பில் சீரமைத்தல்; எல்லிஸ் அணைக்கட்டில் ஆழாங்கால் வாய்க்கால் பிரிவு சுவர் கட்டுதல் ஆகிய திட்ட பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
பொதுப்பணித்துறை மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரியில், 100 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம்; வானுார், மரக்காணம், செஞ்சி, வளவனுார் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு வரும் 'ஸ்மார்ட்' பள்ளி கட்டடம்; நபார்டு திட்ட பள்ளி வகுப்பறை கட்டடம்; ஆகியவற்றின் பணிகள் குறித்து கேட்டறியப்பட்டது.
இந்த பணிகள் அனைத்தும் விரைவாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் விழுப்புரம் நீர் வளத்துறை செயற்பொறியாளர் அருணகிரி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராஜவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.