ADDED : ஏப் 28, 2025 04:44 AM
பள்ளி நிர்வாகிகள் கவுரவிப்பு
அண்ணாமலை கல்வி அறக்கட்டளை முதன்மை தாளாளர் ராஜசேகர், சரஸ்வதி சென்ட்ரல் சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., பள்ளி தாளாளர் முத்து சரவணன், பொருளாளர் சிதம்பரநாதன், பள்ளி முதல்வர் சுபஸ்ரீ, சரஸ்வதி எக்ஸல் பள்ளி நிர்வாக அலுவலர் முத்து சிவஞானம், சரஸ்வதி நீட் சென்டர் நிர்வாகி நாகராஜ் ஆகியோர் 'தினமலர்' நாளிதழ் சார்பில் கவுரவிக்கப்பட்டனர்.
இலவச கையேடு
'நீட்' மாதிரி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிய உணவு, சரஸ்வதி சென்ட்ரல் சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., நீட் தேர்வினை எதிர்கொள்வதற்கான பார்முலா, சமன்பாடுகள் அடங்கிய கையேடு இலவசமாக வழங்கப்பட்டது.
பள்ளி நிர்வாகம் ஏற்பாடு
மாணவர்கள் எளிதாக 'நீட்' தேர்வு எழுத அண்ணாமலை கல்வி அறக்கட்டளை மற்றும் சரஸ்வதி சென்ட்ரல் சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., பள்ளி நிர்வாகம், ஊழியர்கள் தேவையான உதவிகளை முதல்வர் மற்றும் ஆசிரியர்களுடன் செய்திருந்தனர். செஞ்சி, திண்டிவனம் மற்றும் விழுப்புரம் கோர்ட் வளாகம், நான்குமுனை சிக்னல் பகுதிகளில் இருந்து பள்ளி நிர்வாகம் சார்பில் சிறப்பு பஸ் வசதி இயக்கப்பட்டது.
கடைசி நேர பதற்றம் வேண்டாமே
மாதிரி நீட் தேர்வு காலை 10:00 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டு, 9:00 மணிக்குள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும் என, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு இருந்தன. இதை பெரும்பாலான மாணவர்கள் கடைபிடித்து நேரத்திற்கு மையத்திற்கு வந்தனர்.
சில மாணவர்கள் கடைசி நேரத்தில் அவசர அவசரமாக ஓடி வந்து தேர்வு எழுத வந்தனர். மாதிரி தேர்வு என்பதாலும், மாணவர்கள் இத்தேர்வு மூலம் பயிற்சி பெற வேண்டுமென்பதற்காகவும், தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இதே தவறை, மே மாதம் 4ம் தேதி நடக்கும் நுழைவுத் தேர்விலும் செய்துவிட வேண்டாம்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நீட் நுழைவு தேர்வினை எழுத பள்ளி கல்வித் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்களும் பங்கேற்று ஆர்வமாக எழுதினர். 'தினமலர் நீட்' மாதிரி தேர்வு மூலம் தன்னம்பிக்கை பெற்றதாக தெரிவித்தனர்.
முதலில் வந்த மாணவர்கள்
நீட் மாதிரி தேர்வு காலை 10:00 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் திண்டிவனம், காவேரிப்பாக்கம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, தைலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்கள் குழுவாக தேர்வு மையத்திற்கு முதல் ஆளாக காலை 8:10 மணிக்கே வந்தனர். தேர்வு துவங்கும் வரை ரிலாக்சாக பாடங்களை மீள் பார்வை செய்து கொண்டிருந்தனர்.