/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நகராட்சி அலுவலகம் முன் வியாபாரிகள்... முற்றுகை; திண்டிவனம் பஸ் நிலையத்தை மூட எதிர்ப்பு
/
நகராட்சி அலுவலகம் முன் வியாபாரிகள்... முற்றுகை; திண்டிவனம் பஸ் நிலையத்தை மூட எதிர்ப்பு
நகராட்சி அலுவலகம் முன் வியாபாரிகள்... முற்றுகை; திண்டிவனம் பஸ் நிலையத்தை மூட எதிர்ப்பு
நகராட்சி அலுவலகம் முன் வியாபாரிகள்... முற்றுகை; திண்டிவனம் பஸ் நிலையத்தை மூட எதிர்ப்பு
ADDED : ஜூலை 22, 2025 06:27 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் தினசரி அங்காடி கட்டுவதற்காக, நகராட்சி பஸ் நிலையத்தை மூட எதிர்ப்பு தெரிவித்து,சிறு வியாபாரிகள், ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. திண்டிவனம் ரயில் நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இந்திராகாந்தி பஸ் நிலையம் கடந்த 50 ஆண்டுளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த பஸ் நிலையம் அல்லாமல் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள பஸ் நிலையம் மூலம் தொலைதுாரம் செல்லும் பஸ்கள் வந்து செல்கின்றன.
நகராட்சி பஸ் நிலையத்தில் மட்டும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் என 70க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
பஸ் நிலையத்தையொட்டி அதிக அளவில் கடைகள் மற்றும் வேன், ஆட்டோ, கார் ஸ்டாண்டு உள்ளது. இவர்கள் அனைவரும் பஸ் நிலையத்தை நம்பியுள்ளனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன், நகராட்சி பஸ் நிலையத்தில் 4.23 கோடி ரூபாய் செலவில், தினசரி அங்காடி கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இந்த கடைகள் அனைத்தும் பஸ்கள் வந்து செல்லும் பகுதியைச் சுற்றி கட்டப்பட உள்ளது.
இதற்காக நகராட்சி சார்பில் அரசு பஸ் மற்றும் தனியார் பஸ் நிர்வாகத்திடம், கட்டட பணிகள் நடைபெற உள்ளதால், பஸ் நிலையத்தை மூட இருப்பதாகவும், வேறு இடங்களில் நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டது.
இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள் எந்த இடத்தில் நின்று பயணிகளை ஏற்றுவது என்ற பிரச்னை ஏற்பட்டது. இதற்கிடையே பஸ்களை வேறு இடத்தில் நிறுத்தினால் தங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கும் என, பஸ் நிலையத்தை நம்பி தொழில் செய்யும், சிறு வியாபாரிகள், கடைக்காரர்கள் மற்றும் வேன், ஆட்டோ, கார் டிரைவர்கள் உட்பட 100க்கு மேற்பட்டோர் நேற்று காலை 11:00 மணிக்கு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, வியாபாரிகள், ஆட்டோ, வேன் டிரைவர்கள் கவுன்சிலர்கள் பார்த்திபன், அரும்பு குணசேகர், மணிகண்டன் ஆகியோருடன் சென்று நகராட்சி கமிஷனர் குமரனிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கை மனு கொடுத்தனர்.
அப்போது, நகராட்சி பஸ் நிலையத்திற்கு வரும் அனைத்து பஸ்களும் வழக்கம் போல் பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ்கள் வராவிட்டால் வாழ்வாதாரம் பாதிக்கும் என கோரிக்கை வைத்தனர்.
அதற்கு கமிஷனர், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி, நகராட்சி பஸ் நிலையத்திற்கு வழக்கம் போல் அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனையடுத்து, 12:00 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.