யு.ஜி.கேபிள் பழுதாகி மின்சாரம் துண்டிப்பால் மக்கள் தவிப்பு: அரசு மருத்துவமனை, மருந்து கிடங்கில் பணி பாதிப்பு
யு.ஜி.கேபிள் பழுதாகி மின்சாரம் துண்டிப்பால் மக்கள் தவிப்பு: அரசு மருத்துவமனை, மருந்து கிடங்கில் பணி பாதிப்பு
UPDATED : ஜூன் 12, 2026 11:38 AM
ADDED : ஜூன் 11, 2026 04:31 PM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே யு.ஜி.கேபிள் பழுது காரணமாக, தொடரும் மின் வெட்டால், அரசு மருந்து கிடங்கு, ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமின்றி கிராமத்தினர் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த கண்டமானடியில், கோலியனுார் ஒன்றிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு, புறநோயாளிகள் பிரிவு மட்டுமின்றி, பிரசவம் உள்ளிட்ட பல சிறப்பு சிகிச்சை வார்டுகளும், உள் நோயாளிகள் பிரிவும் உள்ளன.
கோலியனுார் வட்டார கிராமத்தினர் இந்த மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இதனருகே விழுப்புரம் மாவட்ட அரசு மருந்து கிடங்கு உள்ளது. சுகாதாரத்துறை சார்பில், மாவட்டத்திற்கான மருந்துகள் இங்கு இருப்பு வைக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்புகின்றனர்.
மேலும் இப்பகுதியில் கால்நடை மருத்துவமனை, அரசு பள்ளிகள், அரசு துறை அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.
இப்பகுதியில் அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டு, நாள் முழுதும் சப்ளை இல்லாமல் இருப்பதால், அரசு அலுவலகங்களும் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருந்து குடோனும் பாதிப்புக்குள்ளாகிறது என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில்,'கண்டமானடி ஊராட்சியில் நீண்டகால மின் வெட்டு பிரச்னையைத் தவிர்க்க, ஊராட்சி நிர்வாகத்தால் 10 ஆண்டுகளுக்கு முன், விழுப்புரம் பகுதியிலிருந்து மின்சார லைன் கொண்டு வரப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன் அந்த லைன் சப்ளை துண்டிக்கப்பட்டு, திருப்பாச்சனுார் துணை மின் நிலைய சப்ளை வழங்கப்பட்டுள்ளது.
விவசாய நிலங்கள் வழியாக சுற்றி வரும் திருப்பாச்சனுார் சப்ளை, லேசான காற்று மழைக்கே மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. காலையில் துண்டிக்கப்படும் மின்சாரம் இரவு வரை வருவதில்லை. சில நாள் மாலை நேரத்தில் துண்டிக்கப்படும் மின் சப்ளை மறுநாள் மாலை வரையும் சீரமைக்கப்படாமல் உள்ளது. சவுக்கு தோப்புகள் போன்றவை உள்ளதால், திருப்பாச்னுார் சப்ளை துண்டிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.
கண்டமானடி மட்டுமின்றி, அரசு ஊழியர் நகர், அத்தியூர், வேளியம்பாக்கம் ஆகிய கிராம பகுதிகளுக்கும் வழங்கி வந்த விழுப்புரம் மின் சப்ளை துண்டிக்கப்பட்டு, இரண்டு மாதங்கள் ஆகிறது. ஜானகிபுரம் ரயில்வே மேம்பாலத்தின் வழியாக தரையின் கீழ் வரும் யு.ஜி.கேபிள் நீண்டகால பயன்பாடு காரணமாக பழுதாகியதால் மின் சப்ளை துண்டிக்கப்பட்டு, தற்காலிகமாக திருப்பாச்சனுார் சப்ளை வழங்கி வருவதாக மின்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
யு.ஜி.கேபிள் வந்தால் புதுப்பித்து வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மின் வெட்டு பிரச்னை தொடர்வதால், அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணிகளும், மாவட்ட அரசு மருந்து குடோனில் மருந்துகள் இருப்பு வைப்பதற்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால், உடனடியாக யு.ஜி.கேபிளை மாற்றி தடையற்ற மின் சப்ளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
