ADDED : செப் 01, 2026 07:32 PM
அரசு அலுவலகங்களில் பொதுமக்கள்... மனுக்கள் மீது தீர்வு கிடைப்பதில் தாமதம்
–நமது நிருபர்–: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில், அலுவலர்களின் மெத்தனம் காரணமாக பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தீர்வு காண்பதில் தாமதம் ஏற்படுவதால் வீணான அலைக்கழிப்புக்கு ஆளாகி அவதியடைந்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 2014ம் ஆண்டு இ சேவை மையம் திட்டம் துவங்கப்பட்டது. இதன் மூலம், அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகள், அரசால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பித்தல் மற்றும் வருவாய்த்துறை தொடர்பான வருமானச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்டோர் சான்றிதழ், பட்டா மாற்றம், சிறு, குறு விவசாயி சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், விதவை சான்றிதழ், வேலையின்மை சான்றிதழ், குடும்ப குடிபெயர்வு சான்றிதழ், கல்வி ஆவணங்கள் பேரிடரால் தொலைந்து போன சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு வகையான சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை ஆன்லைனில் விண்ணப்பித்தால், வி.ஏ.ஓ., – ஆர்.ஐ., மூலம் தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொதுமக்களின் மனுக்கள் மீது மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் துரித நடவடிக்கை எடுக்காமல் கால தாமதம் செய்து வருகின்றனர். பட்டா மாற்றம் கேட்டு மனு கொடுக்கும் பொதுமக்கள் தாலுகா அலுவலகத்திற்கு சென்றால், அங்கிருந்து பரிந்துரை செய்து ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு அனுப்பி விட்டதாக அலுவலர்கள் கூறுகின்றனர்.
இதேபோன்று, மூத்த குடிமக்கள் தங்களை பிள்ளைகள் சரியாக பராமரிப்பது தொடர்பாக மாவட்ட சமூக நலத்துறையில் மனு கொடுத்து வருகின்றனர். அப்படி கொடுக்கப்படும் மனுக்கள் மீது சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரித்து, ஆர்.டி.ஓ., விசாரணைக்கு அனுப்பி வருகின்றனர்.
இந்த மனுக்கள் மீது சமூக நலத்துறை அதிகாரிகளிடம் மூத்த குடிமக்கள் கேட்டால், ஆர்.டி.ஓ., அலுவலத்திற்கு அனுப்பி விட்டதாக கூறுகின்றனர். ஆனால், ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு சென்று தங்கள் மனுக்கள் மீது பொதுமக்கள் கேட்டால் தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் இருந்து தங்களுக்கு எந்த பரிந்துரை கடிதமும் வரவில்லை என அங்குள்ள அலுவலர்கள் கூறுகின்றனர்.
இதையடுத்து, தாலுகா அலுவலகம் மற்றும் சமூக நலத்துறை அலுவலகங்களுக்கு பொதுமக்கள் மீண்டும் சென்று கேட்ட பிறகு அந்த மனுக்கள் பரிந்துரைக்கு அனுப்பப்படுகிறது.
இதேபோன்று பல்வேறு அரசு துறைகளிலும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், தங்கள் கோரிக்கை மனுக்கள் மீது துரித தீர்வு கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். அரசு அலுவலர்களின் இந்த செயல் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மாவட்ட அரசு அலுவலகங்களில் பொதுமக்களை அலைக்கழிக்காமல், மனுக்கள் மீது துரித தீர்வு காண கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
