மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
ADDED : மே 24, 2026 04:15 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வரும் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி வகுப்பு துவங்கியது.
கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி பேசியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் முதல் கட்டமாக வரும் ஜூலை 17ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை 45 நாட்கள் வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இரண்டாவதாக வரும் 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் துவங்கப்படும். அதனடிப்படையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுக்கான 3 நாட்கள் பயிற்சி வகுப்பு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் நல்ல முறையில் பயிற்சி பெற்று இப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். கணக்கெடுப்பு பணியின்போது பொதுமக்களிடம் நல்லமுறையில் அணுக வேண்டும்.
மேலும், ஏற்கனவே 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் மேனுவல் முறையில் நடந்தது. தற்போது, டிஜிட்டல் முறையில் நடைபெற உள்ளது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.
டி.ஆர்.ஓ., அரிதாஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) லுார்துசாமி, மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குநர் (பயிற்சி) யசோதா மற்றும் தாசில்தார்கள், பி.டி.ஓ.,க்கள், நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
